வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: செவ்வாய், 5 பிப்ரவரி 2019 (12:35 IST)

சீனாவின் "பன்றி ஆண்டு" குறித்து தெரிந்து கொள்ளுங்கள்

மில்லியன் கணக்கான சீன மக்கள், பன்றி ஆண்டு தொடங்க சீனப் புத்தாண்டை கொண்டாட தயாராகி வருகின்றனர். சீன கலாசாரத்தில் இந்த பண்டிகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இன்று (பிப்ரவரி 5ஆம் தேதி) அவர்களின் புத்தாண்டு தொடங்குகிறது.
சீன காலண்டரில் உள்ள 12 விலங்கு ராசிகளில் பன்றியும் ஒன்று.
 
வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும், அதாவது பணி, உடல்நிலை, காதல் மற்றும் பல விஷயங்கள் குறித்த அதிர்ஷ்டத்தை கணிக்க இந்த ராசிபலன்கள் அவசியமாகிறது என்று சிலர் நம்புகின்றனர். ஒருவரின் பிறந்த ஆண்டுடன், பன்றி ஆண்டு ஒப்பிடப்படும்.
 
சீனப் புத்தாண்டு என்பது அவர்களுக்கு, ஒரு பெரிய விழா போன்றதாகும். குடும்ப உறவினர்கள் ஒன்று சேர்வது, குழந்தைகளுக்கு பெரியவர்கள் பணம் அன்பளிப்பாக அளிப்பது என்று நாடே கோலாகலமாக இருக்கும்.
 
சீன காலண்டர் அமைப்பு என்பது என்ன?
 
வழமையாக சீன புத்தாண்டானது சீன நாட்காட்டியின் இறுதிநாளன்று தொடங்கும் (பிப்ரவரி 5, 2019). சீன புத்தாண்டின் பதினைந்தாவது நாள் விளக்கு திருவிழாவானது நடக்கும்.
 
சீனாவின் வசந்த திருவிழா வியாட்நாம், கொரியா மற்றும் திபெத் போல சந்திர நாட்காட்டியின்படிதான் நடக்கும்.
 
சந்திர நாட்காட்டியின் முதல் அமாவாசை அன்று தொடங்கி, பெளர்ணமி அன்று முடியும்.
விலங்கு ராசிகள் என்பது என்ன?
 
சீன ராசியில் மொத்தம் 12 விலங்குகள் இருக்கின்றன. அவை எலி, காளை, புலி, முயல், ட்ராகன், பாம்பு, குதிரை, செம்மரி, குரங்கு, சேவல், நாய் மற்றும் பன்றி ஆகும். ஒவ்வொன்றுக்கும் தனித்துவமான குண இயல்புகள் உள்ளன.
 
சீனர்களின் கூற்றுப்படி, புத்தர் பூமியில் இருந்து செல்வதற்கு முன்பாக அனைத்து விலங்குகளையும் அழைத்திருக்கிறார். இந்த 12 விலங்குகள் மட்டுமே அவர் அழைப்பை ஏற்று வந்ததினால், அதற்கு பரிசாக ஒவ்வொரு ஆண்டிற்கும் இந்த விலங்குகளின் பெயரை வைத்தார்.
 
பன்றி ஆண்டில் யார் பிறந்தார்?
 
சியங் கய்-ஷெக்-லிருந்து (தைவானுக்கு தப்பிச் சென்ற முன்னாள் சீனத் தலைவர்) ஹில்லரி கிளின்டன், ஜெர்மன் எழுத்தாளர் தாமஸ் மன், எர்னெஸ்ட் ஹெமிங்வே போன்ற பலரும் இந்தாண்டில் பிறந்துள்ளனர்.
 
அதற்காக இவர்கள் எல்லாம் ஒரே ஆண்டில் பிறந்துள்ளார்கள் என்று அர்த்தம் கிடையாது. பன்றி ஆண்டு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும். உதாரணமாக 2007, 1995, 1983 ஆகியவை பன்றி ஆண்டுகள் ஆகும்.
 
அதிகமானோர் பயணம் செய்யும் காலம்
இந்தியாவில் நடைபெறும் கும்பமேளாவின்போது 12 கோடிக்கும் மேற்பட்டவர்கள் கூடுவார்கள். சீன புத்தாண்டு இதனை விடவும் எண்ணிக்கை அளவில் மிகவும் பெரியதாகும்.
 
இந்த காலத்தின்போது கோடிக்கணக்கானவர்கள் பயணம் செய்வார்கள். பெரும்பாலானவர்கள் பெரும் நகரங்களில் படிப்பதால் அல்லது வேலை பார்ப்பதால், அவர்கள் பெற்றோர் அல்லது தாத்தா பாட்டியை பார்க்க சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வதால் கடும் போக்குவரத்து தேவைகள் நிலவும். பல சீனர்களுக்கு குடும்பத்துடன் ஒன்றாக சேரும் வாய்ப்பு இது மட்டுமாகவே இருக்கும்.
 
இந்த நெரிசலுக்கு சீனா எப்படி ஈடு கொடுக்கிறது?
 
சீன ரயில் சேவையின்படி, இந்தாண்டு புத்தாண்டு காலத்தில் 413 மில்லியன் முறை பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். இது கடந்த ஆண்டை காட்டிலும் 8.3 சதவீதம் அதிகம்.
 
இதற்காக ரயில் கொள்ளளவை 5 சதவீதம் உயர்த்தியுள்ளனர். 17 பெட்டி கொண்ட அதிவேக ரயில்களை அறிமுகப்படுத்தி புதிய பெய்ஜிங்-ஷாங்காய் சேவையினை மேம்படுத்தி உள்ளனர்.
அந்நாட்டின் ஏர் சீனா நிறுவனம், 423 விமானங்களை இயக்க இருக்கிறது. இது 2018ஆம் ஆண்டைவிட 4.4 சதவீதம் அதிகம்.
 
மொத்தத்தில், 73 மில்லியன் மக்கள் வீடு செல்ல உள்ளார்கள். கடந்த ஆண்டைவிட இது 12 சதவீதம் அதிகமாகும்.
 
பணம் இருப்பவர்கள் அனைவரும் பறக்கலாமா?
 
கூடாது என்கிறார்கள் அதிகாரிகள். விமர்சகர்கள் ஆரவெல்லியன் சமூக கடன் அமைப்பு என்று கூறும் முறையை அதிகாரிகள் சோதித்து பார்க்கிறார்கள். தேவையில்லாமல் விமானங்கள் மற்றும் தொடர்வண்டிகளில் செல்வோரை சீன புத்தாண்டு அன்று தடுக்க முடிவு செய்திருக்கிறார்கள்.
 
சீன உச்ச நீதிமன்றம் 2018ஆம் ஆண்டு, 6.15 மில்லியன் சீன மக்களை விமானம் மற்றும் தொடர்வண்டிகளில் பயணிக்க தடை செய்தது.
 
விமானத்தில் தவறாக நடந்து கொண்டவர்கள், தொடர்வண்டிகளில் புகைப்படித்தவர்கள், பொருளாதார ரீதியாக தவறு செய்தவர்கள் ஆகியோர் விமானம் மற்றும் தொடர்வண்டிகளில் பயணிக்க கடந்த ஆண்டு மே 1 முதல் தடைவிதிக்கப்பட்டிருக்கிறார்கள்.