வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: திங்கள், 23 ஏப்ரல் 2018 (13:30 IST)

“குழந்தைகள் மீதான அத்துமீறலை தடுக்க சட்ட நடைமுறையும், விழிப்புணர்வும் அவசியம்”

12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வல்லுறவு செய்தால் மரண தண்டனை என அவசர சட்டம் இந்தியாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
 
இதனால் குழந்தைகள் மீதான அத்துமீறல்கள் குறையுமா? விழிப்புணர்வும் அணுகுமுறையும் மேம்படுவதுதான் தீர்வாகுமா? என்று வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.
 
இதற்கு பிபிசி நேயர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள கருத்துக்களை இங்கே தொகுத்து வழங்குகின்றோம்.
 
சக்தி சரவணன் என்கிற நேயர், கடுமையான தண்டனைகளுக்குரிய சட்டத் திருத்தங்கள் தேவை என்றாலும், பாலியல் கல்வியை நடைமுறைப் படுத்தல், கவர்ச்சியை முன்னிலைப்படுத்திப் பெருகிவரும் ஊடக நிகழ்ச்சி மற்றும் விளம்பரங்களுக்கு கட்டுப்பாடுகள், உரிய இட ஒதுக்கீட்டை அமல்படுத்தல், இணையத்தில் பரவி கிடக்கும் ஆபாசங்களை ஒழுங்குபடுத்தல் போன்றவற்றிலும் அரசு கவனம் செலுத்தி உரிய விழிப்புணர்வையும், நடவடிக்கையையும் உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று ஃபேஸ்புக்கில் கருத்து பதிவிட்டுள்ளார்.
 
தர்ஷினி லியோ என்கிற நேயர் டுவிட்டர் பக்கத்தில், சட்டம் மட்டும் போடுவதால் எந்தப்பயனும் கிடையாது. அதை உடனடியாக நடைமுறைப்படுத்தவேண்டும். அமுலுக்கு வரும்போதுதான் அதன் மீதான பயம் வரும் என்று கருத்து கூறியுள்ளார்.
 
கிருஷ்ணமூர்த்தி செல்வா, ஒருவனுக்கு மரண தண்டனை அளிப்பது என்பது, மனிதனை மீறிய செயல், எந்த காலத்திலும் ஒரு மனிதனை ஒரு மனிதனே கொலை செய்வது அநாகரீகமான செயல். ஒருவன் குற்ற செயல்கள் செய்து விட்டான் என்றால், அவனை உண்மையான அரசியல் தலையீடு மற்றும் அதிகார தலையீடு இல்லாமல் நீதி விசாரணை செய்யவேண்டும். அவன் குற்றவாளி என்றால், ஜாமீன் இல்லா ஆயுள் தண்டனை தரலாம் என்று மரண தண்டனைக்கு எதிரான தன்னுடைய கருத்தை கூறி, ஆலோசனையும் பதிவிட்டுள்ளார்.
 
துரை முத்துசெல்வம் என்கிற நேயர், சட்டங்கள் இயற்றப்படுவதால் குற்றங்கள் குறையுமே தவிர குற்றங்கள் நிகழ்வதை தடுக்க முடியாது. எனவே மக்களுக்கு இந்த விவகாரத்தில் அரசு விழிப்புணர்வை ஏற்ப்படுத்த வேண்டும். குற்ற சம்பவம் ஏன்,எப்படி நடந்ததது என ஆராய்ந்து, அதற்கான காரணங்களை களைந்தால் நிலமைகள் மேம்படும்.
 
கடுமையான தண்டனைகள் குற்றத்தை குறைக்கும். ஆனால் அது வெறும் எழுத்தால் மட்டும் இருந்துவிடக்கூடாது என்பது மோகத் ஜவ்காடாத்தின் டுவிட்டர் பதிவாகும்.
 
துரைராஜா துஷியந்தன் என்கிற நேயர், அதென்ன 12 வயதுக்கு கீழ்? பெண்களின் மீதான அத்துமீறல் வயதெல்லை ஏதுமின்றி கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை கூறியுள்ளார்,
 
பெண்களை பாலியல் வல்லுறவு செய்வோருக்கு மரணதண்டனை கொடுக்க வேண்டும். பெண்களை வயது கொண்டு வித்தியாச படுத்தகூடாது என்கிறார் அப்துல் வஹாப்பின்.
 
கடுமையான தண்டனைகள் மட்டுமே குற்றங்கள் குறைய ஒரே தீர்வு என்று அகிலன் என்னும் நேயர் டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.