வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 8 மே 2020 (15:41 IST)

கொரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்தை கண்டறிந்துவிட்டதா இஸ்ரேல்?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பு மருந்து கண்டறிவதற்கான பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில் இஸ்ரேல் கொரோனாவிற்கான ஆன்டிபாடி மருந்தை கண்டறிந்துவிட்டதாக அறிவித்துள்ளது.

இஸ்ரேல் நாட்டில் தலைமை உயிரியல் ஆய்வகத்தின் விஞ்ஞானிகள் கொரோனா வைரஸுக்கான ஆன்டிபாடி மருந்தை வெற்றிகரமாக கண்டறிந்து விட்டதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் நஃப்தாலி பேனெட் கூறியுள்ளார்.

இந்த ஆன்டிபாடி மருந்து உடலில் இருக்கும் வைரஸைத் தாக்கி அதனை செயல்படவிடாமல் தடுக்கும் என கூறப்படுகிறது.

இந்த ஆன்டிபாடி தற்போது காப்புரிமை பெறும் நடைமுறையில் உள்ளது. காப்புரிமை பெற்றவுடன் தயாரிப்பு பணியில் ஈடுபடவுள்ளோம் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் கூறுகிறார்.

செவ்வாயன்று இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் டிவிட்டர் பக்கத்தில் மூன்று ட்வீட்கள் பதிவு செய்திருந்தார்.

கடந்த இரண்டு நாட்களில் ஐஐபிஆர்(இஸ்ரேல் இன்ஸ்டியூட் ஃபார் பயோலாஜிகல் ரிசர்ச்) வெற்றிகரமாக கொரோனா வைரஸுக்கு எதிரான ஆன்டிபாடி ஒன்றை கண்டறிந்துள்ளது என முதல் டிவிட்டரில் பதிவிட்டார்.

இரண்டாவது பதிவில் கொரோனா வைரஸுக்கான ஆன்டிபாடியில் இருக்க வேண்டிய முக்கிய மூன்று விஷயங்கள் பதிவிடப்பட்டிருந்தது.

1. புதிதான மற்றும் சுத்தீகரிக்கப்பட்ட மொனோக்ளோனல் ஆன்டிபாடியாக இருக்க வேண்டும். மேலும் ஆபத்தான ப்ரோடீன்கள் குறைவாக இருக்க வேண்டும்
2. அந்த ஆன்டிபாடி கொரோனா வைரஸை செயலிழக்கச் செய்ய வேண்டும்.
3. கொரோனா வைரஸின் மேல் பரிசோதனை செய்யப்பட்டிருக்க வேண்டும் .

உலகம் முழுவதும் வெளியிடப்பட்டுள்ள அறிவியல் வெளியீட்டுகளைப் பார்க்கும் போது ஐஐபிஆர் தயாரித்த இந்த ஆன்டிபாடி, மேல் கூறப்பட்டுள்ள அனைத்து தகுதியையும் பூர்த்தி செய்கிறது என மூன்றாவது ட்வீட்டில் பதிவிடப்பட்டிருந்தது.

மொனாக்ளோனல் ஆன்டிபாடி என்றால் என்ன?

அமெரிக்காவின் தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் கூற்றுப்படி மொனொக்ளோனல் ஆன்டிபாடி என்பது ஒரு வகையான ஊட்டச்சத்து அதாவது ப்ரோடீன் ஆகும். இது ஆய்வகத்தில் தயாரிக்கப்படும். நோயாளிகளின் உடலில் நோய்க்காரணிகளாக இருக்கும் பிறபொருட்கள் மீது இது ஒட்டிக்கொள்ளும்.

மொனொக்ளோனல் ஆன்டிபாடி பலவகைப்படும். இது வரை பல வகையான புற்றுநோய் சிகிச்சையில் இது பயன்படுத்தப்பட்டுள்ளது.

டெல்லி கங்காராம் மருத்துவமனையின் மருந்து துறையின் துணை தலைவர் டாக்டர். அதுல் கக்கட் கூறுகையில் மொனொக்ளோனல் ஆன்டிபாடி என்பது புதிது கிடையாது. இதற்கு முன்பு புற்றுநோய் சிகிச்சை மற்றும் பாக்டீரியா, வைரஸ் போன்றவற்றால் ஏற்படும் நோய்களுக்கும் சிகிச்சையாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

மேலும் இது தயாரிக்கப்பட்டு உடனடியாக பயன்படுத்தும் வண்ணம் கிடைக்கும். இதை மோனொ என்றழைப்பர். இந்த ஆண்டிபாடி எதைகுறியாக வைத்து உருவாக்கப்பட்டதோ அதற்கு எதிரான செயல்களை செய்யும் என்றார்.

இது எவ்வாறு வேலை செய்யும்?

நம் உடல் தொற்றை தடுக்க பல பிரிவுகளாக வேலை செய்கிறது. உடலினுள் இயற்கையாகவே ப்ளாஸ்மா செல்கள் இம்யூனோக்ளோபின் என்னும் பிறபொருள் எதிரியை தயாரிக்கின்றன.


இந்த மொனொக்ளோபின் ஆன்டிபாடி இம்யூனொக்ளோபின் ஆன்டிபாடி போன்றே இருக்கும். அதனால் அதன் பெயரில் க்ளோன் என்று இருக்கிறது. இது இம்யூனோக்ளோபின் ஆன்டிபாடியினுள் இருக்கும்.

மொனொக்ளோபின் ஆன்டிபாடி பிறபொருட்களின் செல்மீது ஒட்டிக்கொண்டு அதை செயலிழக்கச் செய்யும் என்கிறார் மருத்துவர் அதுல்.

மொனொக்ளோனல் ஆன்டிபாடி எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

மருத்துவர் அதுல் கூறுகையில், நமக்கு தேவைப்படும் வகையான செல்களை முதலில் ஒரு விலங்குக்கு செலுத்தப்படும். பெரும்பாலும் எலிகளுக்கு செலுத்தப்படும். அந்த விலங்கு ஆய்கத்திற்கு எடுத்து செல்லப்படும்.

கல்லீரலுக்கு பக்கத்தில் மண்ணீரல் என்று உடலில் ஒரு உறுப்பு உண்டு. அந்த விலங்கின் இந்த பகுதியிலேயே பிறபொருள் எதிரி அதாவது ஆன்டிபாடி உற்பத்தியாகும். ஆன்டிபாடி மற்றும் இந்த மண்ணீரலின் செல்கள் இணைந்து ஒரு கூட்டு செல் உருவாகும். இதை ஹைபர்டோமா என்பர். அதாவது ஆன்டிபாடிகள் தயாரிக்க அடிப்படையாக இருக்கும் கூட்டு செல்லை ஹைபர்டோமா என்பர். இந்த ஹைபர்டோமா மூலம் ஆன்டிபாடி தயாரிக்கப்படும். பின் இதை வெளியில் எடுத்து மனிதர்களுக்கு செலுத்துவார்கள் என்கிறார் மருத்துவர் அதுல்.

ஆனால் மருத்துவர் அதுல் கூறுகையில், இஸ்ரேலின் இந்த சோதனை கொரோனா வைரஸ் மேல் எந்த அளவு வெற்றி பெற்று இருக்கிறது என்பது அதைப் பற்றிய முழு தகவல் கிடைத்தால் மட்டுமே தெரியும். முழுமையாக ஆய்வறிக்கை அளித்தால் மட்டுமே அது குறித்து நாம் கூற முடியும் என்கிறார்.

இஸ்ரேலில் இருக்கும் இந்திர மிஷ்ரா என்னும் செய்தியாளரின் கூற்றுப்படி, நோயாளிகளின் உடலில் இருக்கும் வைரஸை அழிக்கும் ஒரு ப்ரோடீனை அவர்கள் தயார் செய்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். விரைவில் இதற்கான ஆய்வு அறிக்கையை வெளியிடுவதாக கூறியுள்ளனர்.

இப்போது இந்த ஆன்டிபாடியை பற்றிய தகவல்கள் வேறு ஏதும் இல்லை. இதை மனிதர்கள் மேல் சோதனை செய்தார்களா என்ற தகவலும் கிடைக்கவில்லை. ஆனால் ஐஐபிஆர் சில மருத்துவ பரிசோதனை செய்ததாக தகவல் கிடைத்துள்ளதாக கூறுகிறார் இந்திர மிஷ்ரா .

ஆன்டிபாடியைப் பார்த்த இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர்

இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் பேனெட் ஐஐபிஆர் ஆய்வகத்தில் கொரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்து கண்டறிவதற்கான உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகத்தில் வந்த தகவலின்படி பாதுகாப்பு அமைச்சருக்கு ஆன்டிபாடி எவ்வாறு மொனொக்ளோனல் முறையில் செயல்படுகிறது மேலும் நோயாளிகளின் உடலில் வைரஸை எவ்வாறு செயலிழக்கச் செய்கிறது என காட்டப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

மேலும் பாதுகாப்பு அமைச்சகம் அளித்துள்ள தகவலின்படி இந்த ஆன்டிபாடி தயாரிப்பு முழுமையாக முடிந்துவிட்டது. தற்போது காப்புரிமை பெறும் நடைமுறையில் உள்ளது. இதன் பின் மற்ற அந்நிய நிறுவனங்களுக்கு இதுகுறித்த தகவல்கள் வழங்கப்படும். இதனால் பல மடங்கு தயாரிப்பு நடக்கும் என தெரிகிறது.

இந்த சாதனைக்காக ஆய்வகத்தின் அனைத்து ஊழியர்களை நினைத்தும் பெருமை படுகிறேன். அவர்களின் திறனே இந்த வெற்றிக்கு காரணம் எனக் கூறியுள்ளார் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் பேனெட்.

கடந்த மார்ச் மாதம் இஸ்ரேல் செய்தித்தாளான Ha’aretz, இந்த அறிவியல் ஆய்வகம் வைரஸ் குறித்த குணங்களை அறிவதில் வெற்றி கண்டுள்ளதாக மருத்துவ ஆதாரங்கள் கூறியுள்ளதாக செய்திகள் வெளியிட்டன.

ஐஐபிஆர் 1952 ஆம் ஆண்டு இஸ்ரேல் பாதுகாப்பு படையில் அறிவியல் தொகுப்பின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டது. பின்னர் இது ஒரு மக்கள் நிறுவனமாக மாற்றப்பட்டது. இது பிரதமர் அலுவலகத்தின் கீழ் வந்தாலும் பாதுகாப்பு அமைச்சகத்துடனே வேலை செய்யும்.

பிப்ரவரி 1 ஆம் தேதி அன்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹூ கோவிட்-19க்கு தடுப்பு மருந்து கண்டறிய இந்த ஆய்வகத்திற்கு ஆணையிட்டதாக கூறப்படுகிறது.

இது 50 அனுபவமிக்க விஞ்ஞானிகள் பணிபுரியும் உலக புகழ்பெற்ற நிறுவனமாகும்.

ஆன்டிபாடிகளால் ஏற்படும் விளைவுகள்:

மொனொக்ளோனல் ஆன்டிபாடி நிறைய பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என அமெரிக்க தேசிய புற்றுநோய் நிறுவனம் கூறியுள்ளது. இந்த பக்கவிளைவுகள் ஒவ்வொருக்கும் வேறுபடும். நோய்க்கு முன் நோயாளி எவ்வளவு ஆரோக்கியமாக இருந்தார், அவருக்கு நோய் எவ்வளவு தீவிரமாக பாதித்துள்ளது எவ்வளவு முறை மருந்து தரப்படுகிறது போன்றவற்றை பொருத்து பக்க விளைவுகள் மாறுபடும்.

பெரும்பாலும் மொனொக்ளோனல் ஆன்டிபாடி தோல் வியாதிகள் மற்றும் காய்ச்சல் போன்ற பக்கவிளைவுகளையே ஏற்படுத்தும். ஆனால் இது சின்ன வகையில் ஏற்படக்கூடிய விளைவுகள் ஆகும்.

தீவிர பக்கவிளைவுகள் என்றால் வாய் மற்றும் தோலில் புண் அல்லது கட்டி ஏற்படும். இதனால் தொற்று அதிகம் ஏற்படலாம். இது தவிர இதயம் நின்றுவிடுவது, மாரடைப்பு மற்றும் தீவிர நுரையீரல் பிரச்சனை ஏற்படலாம்.

சிலர் இந்த மொனொக்ளோனல் ஆன்டிபாடி கொடுத்து உயிரிழந்துள்ளனர். இந்த நோயாளிகளுக்கு காபிலரி லீக் சின்ட்ராம் என்னும் நோய் ஏற்பட்டுள்ளது. இது ஏற்பட்டால் நரம்புகளில் இருந்து ரத்தம் மற்ற திசுக்களுக்கு பாயும். ஏனென்றால் அப்போது ரத்த அழுத்தம் குறைவாக இருக்கும். சில சமயங்களின் பல உறுப்புகள் செயலிழந்து போக வாய்ப்புகள் உள்ளன.

இது போன்ற மருந்துகள் தயாரிக்க விலங்குகள் மீது நிறைய முறை பயன்படுத்தி பார்ப்பார்கள். இதன் பின் மருத்துவ பரிசோதனை நடைப்பெறும். இந்த சோதனை முறைகளின் பக்கவிளைவுகளை தெளிவாக புரிந்து கொள்ள இயலும். மேலும் வெவ்வேறு மக்கள் மீது என்ன விளைவு ஏற்படும் என புரிந்து கொள்வார்கள்.

ஜப்பான், இத்தாலி, மற்றும் பிற நாடுகளின் வைரஸ் மாதிரிகள் பிப்ரவரி மாதத்தில் இஸ்ரேலுக்கு வந்துள்ளது. அப்போதிலிருந்து வைரஸ் தயாரிக்கும் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

உலகெங்கும் பல ஆராய்ச்சிக்குழுக்கள் கோவிட்-19க்கான தடுப்பு மருந்து தயாரிக்கும் பணியில் உள்ளது. பல நிறுவனங்கள் தயாரித்து விட்டோம் எனக் கூறினாலும் இதை யாரும் இப்போது வரை உறுதிப்படுத்தவில்லை.