1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 12 பிப்ரவரி 2022 (13:15 IST)

சென்னையில் விவசாயிகள் திட்டமிட்ட ஊர்வலம் – தடுத்து நிறுத்திய காவல்துறை

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருச்சியில் இருந்து ரயில் மூலம் டெல்லி செல்லவிருந்த நிலையில் 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார்கள்.

விவசாயிகள் இன்று மதியம் 12.30 மணியளவில் பல்லவன் எக்ஸ்பிரஸ் மூலமாக சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்து இறங்கினார்கள்.

அங்கிருந்து, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யும்போது லஞ்சம் வாங்கக் கூடாது என்பதற்காக அங்கிருந்து ஊர்வலமாக தலைமை செயலகம் நோக்கிப் பேரணியாக செல்கின்றனர் என்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின்தகவல் தொழில்நுட்பப் பிரிவு தெரிவித்தது.

அதைத் தொடர்ந்து, தற்போது சென்னை வந்திறங்கிய விவசாயிகள் சங்க உறுப்பினர்களை ரயில்வே நிலையத்திலேயே நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அதனால், அய்யாக்கண்ணு உட்பட 10 பேர் மட்டும் தலைமை செயலகம் சென்று, உணவுத் துறையில் கோரிக்கை மனு அளிக்கவும் மற்றவர்கள் தனியார் மண்டபத்தில் தங்கியிருந்து திட்டமிட்டபடி, இன்று மாலை டெல்லி புறப்படவும் முடிவு செய்துள்ளார்கள்.

கோவை மாவட்டத்தில் மின்வேலியில் அடிபட்டு யானை இறப்பு

கோவை மாவட்டம் துடியலூர் அருகே தடாகம் வனப்பகுதியில், மின்வேலியில் அடிபட்டு யானை ஒன்று இறந்துள்ளது.

இந்த சம்பவம் தடாகம் வனப்பகுதிக்கு உட்பட்ட வரப்பாளையம் என்கிற இடத்தில் அமைந்துள்ள தனியார் நிலத்தில் நடந்துள்ளது எனவும், மின்வேலி காரணமாக ஆண் யானை ஒன்று இறந்துள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது .

இந்த பகுதி, வனப்பகுதிக்கு மிக அருகே அமைந்திருப்பதால் யானை உணவு தேடி வந்தபோது இறந்திருக்கிறது என்றும் தந்தத்திற்காக யானை வேட்டையாடப்படவில்லை என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமீப நாட்களாக தனியார் நிலங்களில் அமைக்கப்படும் உயர் அழுத்த மின்வேலிகளில் அடிபட்டு யானைகள் இறப்பது அதிகரித்து வருகிறது என்பது குறிப்படத்தக்கது.