1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By papiksha
Last Updated : திங்கள், 30 டிசம்பர் 2019 (11:52 IST)

கோபாலபுரம் தொடங்கி கன்னியாகுமரி வரை: ட்விட்டரில் ட்ரெண்டாகும் வேண்டாம் CAA - NRC கோலம்

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சென்னை பெசண்ட் நகரில் நான்கு பெண்கள் உட்பட 5 பேர் கோலம் வரைந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இந்த கைதுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
 
CAA - NRC-க்கு எதிராகப் போராடும் செயற்பாட்டாளர்கள், இந்த சட்டத்திருத்தத்திற்கு எதிராக வீடுகளில் கோலமிடும்படி அழைப்பு விடுத்திருந்தனர்.
 
இன்று அதிகாலை திமுக தலைவர் மற்றும் தொடர்கள் பலர் ''வேண்டாம் CAA NRC'' என்ற அதே வாசகத்துடன் கோலம் வரைந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
 
மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் ''வேண்டாம் CAA NRC'' என்ற வாசகத்துடன் கோலம் வரையப்பட்டுள்ளது.
 
எங்கள் வாசலில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், எங்கள் வீட்டில் என்று குறிப்பிட்டு, ''வேண்டாம் CAA NRC'' என்ற வாசகத்துடனான கோலம் உள்ள புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
 
இதனை அடுத்து திமுக ஆதரவாளர்கள் பலர் அவர்கள் வீட்டு வாசலில் வண்ணக் கோலங்கள் வரைந்து அந்த புகைப்படங்களைச் சமுக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து #DMKKolamProtest என்ற ஹாஷ் டாக் சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
 
தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைவர் மு க ஸ்டாலின் இல்லத்திலும், ''வேண்டாம் CAA NRC'' என்ற வாசகத்துடன் கோலம் வரையப்பட்டுள்ளது.
 
நேற்று கைது நடவடிக்கை தொடர்பாக "குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களைத் தடுக்க எங்களுக்கு முழு அதிகாரம் உள்ளது. இவ்வாறான சிறிய குழுக்கள் பெரிதாக மாறலாம், இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரக்கூடும். அதனால் ஆரம்பக் கட்டத்திலேயே இவர்களைத் தடுக்க வேண்டும்" என்று காவல் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
 
இந்நிலையில் இன்று அரசியல் பிரமுகர்கள் பலர் கோலம் வரைந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.