1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
  4. Death count increases to 32 in Pakistan rail crash

பாகிஸ்தான் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு

பாகிஸ்தான்
பாகிஸ்தானில் இரு ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32-ஆக உயர்ந்துள்ளது. 40-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

 
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள தஹார்கி என்ற பகுதியில் சர் சையஸ் எக்ஸ்பிரஸ் மற்றும் மில்லட் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் மோதிக்கொண்டன. இன்று அதிகாலையில் விபத்து நடந்ததாகவும் ரயில்போக்குவரத்து நிறுத்தப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
மில்லட் எக்ஸ்பிரஸ் ரயில் கராச்சியில் இருந்து சர்கோதா நோக்கிச் சென்று கொண்டிருந்தது. சர் சையத் எக்ஸ்பிரஸ் ரயில் ராவல்பிண்டியில் இருந்து கராச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. மில்லட் எக்ஸ்பிரஸின் பெட்டிகள் தரம்புரண்டு அருகேயுள்ள தண்டவாளத்தில் விழுந்து கிடந்ததாகவும், அந்த வழியாக வந்த சர் சையது எக்ஸ்பிரஸ் பெட்டிகள் மீது மோதியதாகவும் ரயில்வே செய்தித் தொடர்பாளர் கூறியிருக்கிறார்.
 
இந்த விபத்து தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அதிர்ச்சியைப் பதிவு செய்திருக்கும் பிரதமர் இம்ரான் கான், சம்பவ இடத்துக்கு விரைந்து செல்ல அமைச்சருக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் இம்ரான்கான் குறிப்பிட்டிருக்கிறார்.
 
விபத்து நடந்தபோது சையது அகமது எக்ஸ்பிரஸ் சுமார் 100 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்ததாக அதில் பயணம் செய்த அப்துல் ரகுமான் என்பவர் பிபிசியிடம் கூறியுள்ளார். விபத்து நடந்ததும் எங்கும் அழுகுரல்களும், கதறல்களும் கேட்டதாக அப்துல் ரகுமான் கூறியிருக்கிறார். சுற்றிலும் இருள் சூழ்ந்திருந்தது. மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் அந்த வெளிச்சத்தில் காயமடைந்தவர்கள் மீட்டார்கள் என்று அவர் கூறுகிறார்.
 
கடந்த சில ஆண்டுகளில் பல ரயில் விபத்துகள் பாகிஸ்தானில் நடந்திருக்கின்றன. கடந்த மார்ச் மாதம் கராச்சி எக்ஸ்பிரஸ் தடம் புரண்டதில் ஒருவர் உயிரிழந்தார். 2019-ஆம் ஆண்டு நவம்பரில் டெஸ்காம் எக்ஸ்பிரஸில் ஏற்பட்ட தீவிபத்தில் 74 பேர் உயிரிழந்தனர்.
About Writer
Sugapriya Prakash