1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 19 மார்ச் 2025 (10:20 IST)

கொல்கத்தாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டி இடமாற்றமா? என்ன காரணம்?

ஐபிஎல் போட்டிகள் மார்ச் 22ஆம் தேதி தொடங்க இருக்கின்ற நிலையில், கொல்கத்தா மற்றும் லக்னோ அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெறும் இடம் மாற்றம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
18ஆவது ஐபிஎல் போட்டி மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. முதல் போட்டி கொல்கத்தா மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கிறது, இதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.
 
இந்த நிலையில், ஏப்ரல் 6ஆம் தேதி ராமநவமி கொண்டாட்டங்கள் நடைபெறுவதால், ஈடன் கார்டன் மைதானத்தில் அன்றைய தினம் நடைபெற உள்ள லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் கொல்கத்தா அணியின் போட்டிக்கான மைதானம் மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
மேற்குவங்க பாஜக தலைவர், அன்று பல ஊர்வலங்கள் நடைபெறும் என தெரிவித்துள்ளார். இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, முக்கிய காவல்துறை அதிகாரிகள் மேற்குவங்க கிரிக்கெட் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். போட்டிக்கான பாதுகாப்பு அளிக்க போதுமான காவல்துறையினர் இல்லாததால், வேறு இடத்திற்கு போட்டியை மாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இது தொடர்பாக பிசிசிஐ இறுதி முடிவு எடுக்கும் என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டும் ராமநவமி தினத்தன்று கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி, பாதுகாப்பு காரணங்களுக்காக வேறு மைதானத்திற்கு மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran