வெள்ளி, 20 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : புதன், 4 செப்டம்பர் 2024 (15:12 IST)

ED-க்கு எதிரான வழக்கு.! பின் வாங்கிய செந்தில் பாலாஜி.!!

senthil balaji ed
அமலாக்கத்துறை விசாரணையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கை திரும்பப் பெற அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  
 
சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், அமலாக்கத் துறையால் கடந்தாண்டு ஜூன் 14ஆம் தேதி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. பின்னர், முதன்மை அமர்வு நீதிமன்ற உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் இந்த வழக்கை தொடர்ந்து ஒத்திவைக்க முடியாது என தெரிவித்தது. வழக்கு விசாரணையை செப்.4ஆம் தேதி தொடங்க வேண்டும் எனவும், அவகாசம் கேட்கக் கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 
இந்நிலையில், இன்று அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கை திரும்பப் பெறுவதாக மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், ஆகஸ்ட் 8ஆம் தேதி அமர்வு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவுகள் தொடங்கி விட்டதால், வழக்கை திரும்பப் பெற அனுமதித்து தள்ளுபடி செய்தனர்.