1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Massive Earthquake Strikes Myanmar: Over 1,600 Dead

1,600-ஐ கடந்த மியான்மர் நிலநடுக்க பலி.. ‘ஆபரேஷன் பிரம்மா’ மூலம் இந்தியா உதவி..!

நிலநடுக்கம்
மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை  ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,600-ஐ கடந்ததாக மீட்புப் படையினர்  தெரிவித்தனர். இன்னும் பலர் கட்டட இடிபாடுகளில் சிக்கியிருக்கக்கூடிய நிலையில், உயிரிழப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என அஞ்சப்படுகிறது.
 
இந்த நிலையில் நேற்று காலை 11 மணியளவில் மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டது. மக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். மியான்மரில் ஆட்சி செய்யும் ராணுவ அரசு வெளியிட்ட அறிக்கையில், இதுவரை 1,644 உடல்கள் மீட்கப்பட்டதாகவும், 3,408 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. காணாமல் போயுள்ள 139 பேரை தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 
மண்டலாய் நகரை மையமாகக் கொண்டு இரு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. முதலில் 7.7 அளவிலும், பிறகு 6.4 அளவிலும் ரிக்டர் அளவுகோலில் பதிவானது. இதனால் தலைநகர் நேபிடா, மண்டலாய் உள்ளிட்ட ஆறு மாகாணங்களில் அவசரநிலை அறிவிக்கப்பட்டது.
 
தாய்லாந்தில் கூட நிலநடுக்கம் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது. பாங்காக்கில் 33 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்தனர். 47 பேர் மாயமாகினர், அவர்களை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது.
 
இந்த பேரழிவை நேரில் பார்த்த பலரும் தங்கள் குடும்பத்தினரை இழந்த வேதனையில் ஆழ்ந்துள்ளனர். அதே நேரத்தில், இந்தியா தனது ‘ஆபரேஷன் பிரம்மா’ மூலம் மீட்பு மற்றும் நிவாரண உதவிகளை அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
இன்று ஆர்.எஸ்.எஸ் தலைமையகம் செல்கிறார் பிரதமர் மோடி.. தீவிர பாதுகாப்பு ஏற்பாடு..!