பழைய கட்டிடங்களில் பேய் நடமாட்டம் இருப்பது உண்மையா?!.. ஆராய்ச்சியில் புதிய கண்டுபிடிப்பு..
பாழடைந்த வீடுகளில் பேய், பிசாசு இருக்கும் என்கிற நம்பிக்கை, எண்ணம், பயம் பலரிடமும் இப்போதும் இருக்கிறது. அதற்கு காரணம் நம்மூர் திரைப்பட முதல் ஹாலிவுட் சினிமா வரை பாழடைந்த வீடுகளில் பேய்கள் இருப்பது போல காட்டி மக்களின் மனதில் அப்படி ஒரு எண்ணத்தை பதிய வைத்துவிட்டனர். தமிழில் வெளியான டீமாண்டி படத்தில் கூட இதுதான் கதை.
ஒருபக்கம் இது உண்மையா என பலரும் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். நம்மூர் முதல் வெளிநாடுகளில் உள்ள பாழடைந்த வீடுகளில் ஆவி, பேய் இருக்கிறதா என வீடியோ எடுத்து பலரும் வெளியிட்டிருக்கிறார்கள். அப்போதெல்லாம் உள்ளே போகும் நபரின் இதயதுடிப்பு வேகமாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. அது பயத்தால் கூட இருக்கலாம். நல்ல சக்தி இருப்பது போலவே கெட்ட சக்திகள் இருப்பதாக உலகெங்கும் உள்ள மக்களிடம் நம்பிக்கை உண்டு.
பழைய கட்டிடங்களில் பேய் நடமாட்டம் இருக்கிறதா என்கிற ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில்தான், கனடாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சில முக்கிய விஷயங்களை கண்டுபிடித்திருக்கிறார்கள். பழைய கட்டிடங்களுக்கு செல்லும்போது ஏற்படும் ஒருவிதமான இனம் புரியாத பயம் மற்றும் பதற்றத்திற்கு Infrasound என சொல்லப்படும் அதிர்வெண் குறைந்த ஒலிகளே காரணம் என அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
மனித காதுகளால் கேட்க முடியாத 20 Hertz-க்கும் குறைவான இந்த ஒலிகள், துருப்பிடித்த குழாய்கள், காற்றோட்ட வசதிகள், இயந்திரங்கள் மூலம் உருவானதாக கூறியிருக்கிறார்கள். மேலும், இந்த ஒலிகள் மனிதர்களின் உடலில் Cortisol எனும் ஹார்மோனை அதிகரித்து காரணமே இல்லாமல் எரிச்சல், சோகம் பயத்தை உண்டாக்குவதாகவும் கண்டறிந்துள்ளனர்.