1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. America accepted as drone attack was a failure

ட்ரோன் தாக்குதலில் பயங்கரவாதிகள் கொல்லப்படவில்லை… அமெரிக்கா மன்னிப்பு!

ஆப்கானிஸ்தான்
காபுல் விமான நிலையத்தில் இரண்டு முறை குண்டுவெடிப்பு சம்பவம் நடந்து அதில் 72 பேர் பலியாகினர்.

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் மக்கள் வேகவேகமாக வெளியேற்றினர். இந்நிலையில் ஆப்கன் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே நடந்த வெடிக்குண்டு தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் உட்பட 72 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அமெரிக்க அதிபர் பைடன் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து ‘காபூல் குண்டுவெடிப்பை மறக்க மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம். தேடிவந்து வேட்டையாடுவோம்’ என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதையடுத்து ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ்.கோராசன் பயங்கரவாதிகளை குறிவைத்து ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அறிவித்தது. ஆனால் இப்போது அந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் யாரும் கொல்லப்படவில்லை என்றும் அப்பாவி பொதுமக்கள் 10 பேர்தான் கொல்லப்பட்டார்கள் என்றும் அமெரிக்கா ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கோரியுள்ளது.

அமெரிக்க ராணுவத்தின் மத்திய கமாண்ட் பிரிவின் ஜெனரல் கென்னத் மெக்கன்சி ‘வெள்ளை நிற டொயோட்டா கொரோல்லா காரில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக எங்களின் புலனாய்வு பிரிவினர் சந்தேகித்தனர். அதை வைத்து காரில்  வெடிபொருட்கள் இருக்கலாம் என சந்தேகித்து தாக்கினோம். ஆனால் அந்த தாக்குதலில் அப்பாவி மக்கள் 10 பேர் கொல்லப்பட்டனர். அது மிகப்பெரிய தவறுதான்.’ எனக் கூறியுள்ளார்.