1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By vinothkumar
Last Updated : வெள்ளி, 20 செப்டம்பர் 2019 (09:52 IST)

ஸ்மித்தை வீழ்த்த முடியாமல் இங்கிலாந்து பவுலர்கள் திணறியது ஏன் ?- சச்சின் விளக்கம் !

ஆஷஸ் தொடரில் வீழ்த்த முடியாத வீரனாக இங்கிலாந்து பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த ஸ்டீவ் ஸ்மித்தின் உத்தி குறித்து சச்சின் டெண்டுல்கர் விளக்கம் அளித்துள்ளார்.

நடந்து முடிந்த ஆஷஸ் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதில் ஆஸ்திரேலியாவில் இருந்து ஸ்டீவ் ஸ்மித்தை எடுத்துவிட்டால் நிச்சயம் மண்னைக் கவ்வி இருக்கும். இந்த தொடரில் மட்டும் அவர் 774 ரன்களைக் குவித்து கவாஸ்கரின் சாதனையை சமன் செய்தார். இந்த தொடரில் அவருக்கு நெருக்கமாகக் கூட யாரும் ரன் குவிக்கவில்லை. இந்நிலையில் அவரை ஆட்டமிழக்க வைக்க  இங்கிலாந்து பவுலர்கள் பல உத்திகளை தீட்டியும் எதுவும் பலிக்கவில்லை. இது குறித்து இந்தியாவின் லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதில் ‘ ஸ்மித்தின் உத்தி சிக்கல் நிறைந்தது. ஆனால் அவரது மனம் ஒருங்கிணைந்த ஒன்று. இதுதான் அவரை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. முதல் டெஸ்ட்டில் அவரை ஸ்லிப் திசையில் அவுட் ஆக்க நினைத்தனர். ஆனால் அவர் ஆஃப் ஸ்டம்புக்கு வந்து லெக் ஸ்டம்பைக் காட்டி விளையாடினார். அடுத்த டெஸ்ட்டில் லெக் ஸ்லிப், லெக் கல்லி  வைத்து ஜோப்ரா ஆர்ச்சரை வைத்து அவுட் ஆக்க முயன்றனர். இந்த முறை அவர் கொஞ்சம் ஆடிப்போனார். அதனால் தான் பவுன்சரில் அடிபட்டார். ஆனால் கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் அவர் உத்தியை மாற்றினார், முன்னால் உடலை நீட்டி பவுன்சரின் லைனிலிருந்து சற்றே விலகி பந்தை ஆடாமல் குனிய முடிந்தது. இதனால்தான் சிக்கல் நிறைந்த அவரது உத்தி பவுலர்களுக்கு சவாலாக உள்ளது’ எனக் கூறியுள்ளார்.