1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 26 ஜனவரி 2019 (16:56 IST)

எத்தனை ஒடுகாலி, அமாவாசைகள் வந்தாலும் அ.தி.மு.கவை அழிக்க முடியாது: செந்தில் பாலாஜியை கிழித்து தொங்கவிட்ட விஜயபாஸ்கர்

எத்தனை ஒடுகாலி, எத்தனை அமாவாசைகள் வந்தாலும் அ.தி.மு.க கட்சியினை அசைக்க முடியாது கரூரில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்  செந்தில் பாலாஜியை விமர்சித்து பேசியுள்ளார்.

கரூர் மாவட்ட அ.தி.மு.க கட்சியின் மாணவரணி சார்பில், கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிறப்புரையாற்றினார். 

அப்போது பொதுக்கூட்ட மேடையில் பேசிய அவர், இந்தி எதிர்ப்பு திணிப்பு போராட்டம் நடைபெற்ற போது., திராவிட பாரம்பரியம் பாதுகாக்க வேண்டுமென்று தமிழக மண்ணில், தமிழ் மண்ணை காக்க வேண்டி பலர் இன்னுயிர் விட்டுள்ளனர். அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்த வேண்டிய கூட்டம் தான் இந்த பொதுக்கூட்டம் என்று கூறிய அவர், தமிழக மண்ணில் தேசிய கட்சிகள் எல்லாம் காணாமல் போய் வருகின்றன என்றும், இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றுத்தந்த காங்கிரஸ் கட்சி இரண்டு முறை சின்னத்தினை இழந்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

மேலும், அப்போது., அரசு மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை மறைந்த முதல்வர் ஜெயலலிதா கொடுப்பேன் என்று சொன்னார்., ஆனால், மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியும், அவரது கட்சியுமான தி.மு.க கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை நம்பி மைனாரிட்டி தி.மு.க அரசின் மானாட மயிலாட என்பதை நம்பியும், கலைஞர் தொலைக்காட்சி நம்பியும் வாக்களித்தார்கள், அதன் பின்னர் ஆட்சிக்கு வந்தவுடன் நிலத்தினை அபகரித்தவர்களிடமிருந்து நிலத்தினை மீட்டு கொடுப்பதாக முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதா கூறினார். அந்த காலக்கட்டத்தில் நில அபகரிப்பு சட்டத்தினை கொண்டு வந்து தி.மு.க வினர் அபகரித்த சொத்துக்களை மீட்டுக்கொடுத்த ஒரே தலைவர் புரட்சித்தலைவி ஜெயலலிதா தான் என்றார். 

தி.மு.க என்று எடுத்துக்கொண்டால் மக்கள் மத்தியில் அராஜகம், கட்டப்பஞ்சாயத்து, ரெளடிசம் என்ற அளவிற்கு அந்த கட்சி விளங்கியது என்றார். மேலும், இதே தொகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் (வி.செந்தில் பாலாஜி), ஊழலை பற்றி பேசுகின்றார். அப்போது, மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜியை வைத்துக் கொண்டே பேருந்து வாங்கியதில் ஊழல் என்கின்றார். மேலும், இந்த அ.தி.மு.க என்கின்ற ஒரு இயக்கத்தினை எத்தனை ஒடுகாலி மற்றும் எத்தனை அமாவாசைகள் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது என்றும கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதியிலும் அ.தி.மு.க மகத்தான வெற்றி பெறும் என்றும் கூறியதோடு, முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, அப்போது., அ.தி.மு.க.வில் இருந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு சென்று அங்கிருந்து தற்போது தி.மு.க விற்கு சென்றதையடுத்து அவரை ஒடுகாலி என்றும் அமாவாசை என்றும் ஏகவசனமாக பேசினார்.