1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 18 மே 2022 (18:21 IST)

அற்புதம்மாளின் போராட்ட வாழ்க்கை - படமாக எடுக்க விரும்பும் இயக்குநர்!

பேரறிவாளன் தாயார் அற்புதம்மாளின் போராட்ட வாழ்க்கையை படமாக உருவாக்க விரும்புகிறேன் என திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் கூறியுள்ளார். 

 
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 1991ம் ஆண்டு சிறையிலடைக்கப்பட்டவர் பேரறிவாளன். இந்த விவகாரத்தில் அவரை விடுதலை செய்யக்கோரி பல ஆண்டுகளாக பல்வேறு அமைப்புகள் தொடர் கோரிக்கைகளை வைத்து வந்தன.
 
இந்நிலையில் 2014ல் தமிழக அரசு மற்ற 6 பேருடன் சேர்த்து பேரறிவாளனையும் விடுதலை  செய்ய நடவடிக்கைகள் மேற்கொண்டது. ஆனால் தற்போது வரை இந்த ஏழு பேர் விடுதலை குறித்த மனு ஆளுனர், குடியரசு தலைவர் யார் மூலமாக நிறைவேற்றப்படும் என பல குழப்பங்கள் இருந்து வந்தது.
 
இந்நிலையில் கடந்த மார்ச் 15ம் தேதி உச்சநீதிமன்றம் முதன்முறையாக பேரறிவாளனுக்கு பெயில் வழங்கியது. மேலும் பேரறிவாளனை விடுவிப்பது குறித்து மத்திய அரசு தனது முடிவினை தெரிவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
 
ஆனால் இந்த விவகாரத்தில் மத்திய அரசின் வாதங்கள் ஏற்புடையதாக இல்லை என உச்சநீதிமன்றம் கருதியது. இந்நிலையில் இன்று பேரறிவாளன் குறித்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு, சட்டம் 161வது பிரிவில் ஆளுனர் முடிவெடுக்க தாமதப்படுத்தினால் சட்டப்பிரிவு 142 ஐ பயன்படுத்தி நீதிமன்றம் முடிவெடுக்கலாம் என்ற அடிப்படையில் பேரறிவாளனை விடுதலை செய்வதாக உத்தரவிட்டுள்ளது.
 
பேரறிவாளன் விடுதலை குறித்து பலர் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். அந்த வகையில் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாளின் போராட்ட வாழ்க்கையை படமாக உருவாக்க விரும்புகிறேன் என திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் கூறியுள்ளார். அற்புதம்மாளின் 31 ஆண்டுகால சட்டப் போராட்டத்தை காட்சிப்படுத்துவது ரொம்பவே சவாலானது என அவர் தெரிவித்துள்ளார்.