ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By papiksha joseph
Last Updated : சனி, 3 ஜூன் 2023 (09:02 IST)

இரும்புப் பெட்டிகளைப் போலவே இதயக்கூடும் நொறுங்கிவிட்டது - ரயில் விபத்து குறித்து வைரமுத்து!

நேற்றிரவு கொல்கத்தாவில் இருந்து சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 7 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலசோர் ரயில் நிலையத்தை கடந்து கொண்டிருந்தது. 
பாஹநகர் பஜார் நிலையம் அருகே பெங்களூருவிலிருந்து ஹவுரா சென்ற சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டுள்ளது. விபத்துக்குள்ளான இந்த ரயிலின் பெட்டிகள் அருகே இருந்த தண்டவாளத்தில் கவிழ்ந்தன.
 
இதையடுத்து அருகில் இருந்த தண்டவாளத்தில் சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், தடம்புரண்ட கிடந்த பெங்களூரு- ஹவுரா ரயிலின் பெட்டிகள் மீது மோதியது. இதை அறியாமல் சிறிது நேரத்தில் அதே தண்டவாளத்தில் வந்த சரக்கு ரயில், ஏற்கெனவே விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயிலின் பெட்டிகள் மீது பயங்கரமாக மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.  
 
இந்த கோர விபத்தில் சற்றுமுன் கிடைத்த தகவலின் படி ன்சுமார் 288 பேர் பலியாகினர். 900-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் மீட்புப்பணியினர் தொடர்ந்து துரிதமாக செய்யப்பட்டு வருகிறார். 
 
இந்நிலையில் ஒடிசா ரயில் விபத்து குறித்து கவிஞர் வைரமுத்து உருக்கமான கவிதை பதிவு ஒன்றை இட்டுள்ளார், அதில்.. 
 
இரும்புப் பெட்டிகளைப் போலவே
இடிபாடுகளுக்குள் சிக்கி
இதயக்கூடும் நொறுங்கிவிட்டது
 
பாதிக்கப்பட்ட
ஒவ்வொரு குடும்பத்திற்கும்
ஆழ்ந்த இரங்கல்
 
மீட்புப் பணியாளர்க்குத்
தலைதாழ்ந்த வணக்கம்
 
இருந்த இடத்தில்
எழுந்து நின்று மௌனமாய் அஞ்சலிக்கிறேன் 
 
கண்ணீர்
கன்னம் தாண்டுகிறது. 
 
 
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் இரயில் விபத்து மீட்புப் பணியில் தமிழ்நாட்டுக் குழு, விபத்துக்குள்ளானோர் குறித்து தகவல்களை அறிய : 
044-28593990
9445869843