1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 3 பிப்ரவரி 2020 (12:53 IST)

பிளானிங்கா... தற்செயலா... உதயநிதி அழைப்பால் கழகத்தினர் ஷாக்??

போராட்டத்திற்கு உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளது கழகத்தின் முக்கிய நபர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வில் 100 இடங்களுக்கு தகுதி பெற்றோர் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்களாக இருந்தது சர்ச்சையானது.
 
இது குறித்து நடைபெற்ற விசாரணையில் தேர்வர்கள் முறைகேடான வழியில் தேர்ச்சி பெற இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்ததாகவும், மேலும் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களை தேர்வு செய்ய சொல்லியும் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
 
மேலும் சில மணி நேரங்களிலேயே அழிந்துவிடும் விசேஷ பேனாவை கொண்டு விடைகளை குறித்தது மட்டும் அல்லாமல், அந்த மையங்களில் பணியில் இருந்த நபர்களுடன் இணைந்து இடைத்தரகர்களும் சரியான பதிலை குறித்து மற்ற தாள்களுடன் இணைத்துள்ளனர்.
 
இதனை தொடர்ந்து மோசடி சம்பவத்தில் சம்பந்தப்பட்ட 99 தேர்வர்களையும் இனி ஆயுளுக்கும் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத தடை தேர்வு ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில் இது தொடர்பாக போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார் இளைஞர் அணி செயளாலர் உதயநிதி ஸ்டாலின். 
 
சென்னை மெரினாவில், பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய உதயநிதி ஸ்டாலின், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் முறைகேடு நடைபெற்றிருப்பதைக் கண்டித்து, டிஎன்பிஎஸ்சி அலுவலகம் முன் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்தார். 
 
இந்த அறிவிப்பால் கழகத்தின் மூத்த நபர்கள் அதிர்ச்சியில் உள்ளதாக தெரிகிறது. ஏனெனில் போராட்டம் குறித்து திமுக தலைவரே அறிவிப்பை வெளியிடுவார். ஆனால் உதயநிதி தற்போது போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.