மக்கள் கஷ்டத்தில் இருக்காங்க!.. முதல்வர் தூங்குகிறார்.. கொந்தளித்த விஜய்
திருச்சி மாவட்டத்தை சேர்ந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் கதிரவன் மற்றும் ஒளிப்பதிவு செபாஸ்டின் ஆகிய இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டியின் கல்குவாரியில் செய்தி சேகரிக்க சென்றனர். அங்கு முறைகேடு நடப்பதாக தகவல் கிடைத்த நிலையில் அவர்கள் அங்கு சென்றதாக தெரிகிறது.
அப்போது பழனியாண்டி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டவர் அவர்கள் இருவரையும் கடுமையாக தாக்கினார்.. அதில் பலத்த காயமடைந்த கதிரவன் மற்றும் செபாஸ்டின் இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதற்கு பல ஊடகங்களும் பத்திரிகை சங்கங்களும் கண்டனம் தெரிவித்ததோடு போராட்டமும் நடந்தது. ஆனால் இதுவரை திமுக தலைமை பழனியாண்டி எம்எல்ஏ மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.. இந்நிலையில், தவெக தலைவர் விஜய் இதற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்..
ஜனநாயகத்தின் நான்காவது தூணாகச் செயல்படும் ஊடகவியலாளர்கள் மீது ஸ்ரீரங்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. பழனியாண்டி நடத்திய தாக்குதல் கடும் கண்டனத்திற்கு உரியது.
குவாரி தொடர்பாகச் செய்தி சேகரிக்கச் சென்ற நியூஸ் தமிழ் 24X7 செய்தித் தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் மீது ஸ்ரீரங்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. பழனியாண்டி கொடூரமாகத் தாக்குதல் நடத்திய வீடியோ, அண்மையில் வெளியானது. அதற்குப் பிறகும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்காமல், வேடிக்கை பார்க்கும் நிலையில்தான் முதல்வர் அவர்கள் இருக்கிறார் என்பது வெட்கக் கேடானது.
பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி, பொதுவெளியில் இவ்வளவு மோசமாகச் செயல்படுவது, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கிடக்கிறது என்பதற்கு இன்னுமொரு சான்றாகும்.
ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்குப் பதிவு செய்து, உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு உரிய நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
தமிழ்நாடே பாதுகாப்பின்றிப் பதைபதைத்து இருக்கையில், தூக்கத்தில் இருக்கும் முதல்வரால் மக்கள் துயரத்தில் இருக்கின்றனர். இப்படிப்பட்ட ஆட்சியை மக்கள், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தூக்கி எறிவது உறுதி! உறுதி! உறுதி! என பதிவிட்டிருக்கிறார்.