1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 4 ஜனவரி 2020 (15:36 IST)

நள்ளிரவு… ஷேர் ஆட்டோவில் அபயக்குரல் – இளைஞரின் தியாகம் !

ஷேர் ஆட்டோவில் கடத்தி செல்லப்பட்ட பெண் ஒருவரை காப்பாற்ற முயன்ற இளைஞர் கொல்லப்பட்ட செயல் திருவள்ளூரில் நடந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கொண்டஞ்சேரி கிராமத்தைச் சோ்ந்தவர் யாகேஷ். தனியார் நிறுவனம் ஒன்றில் ஓட்டுனராகப் பணிபுரியும் இவர் கடந்த டிசம்பர் 26ஆம் தேதி தனது ஊரில் இருந்துள்ளார். அப்போது ஷேர் ஆட்டோ ஒன்றில் இருந்து பெண் ஒருவரின் அபயக்குரல் கேட்க, நண்பர்களோடு அந்த ஆட்டோவைப் பிடிக்க முயன்றுள்ளார். இதனால் பயந்த ஷேர் ஆட்டோ ஓட்டுனர் பெண்ணை தள்ளிவிட்டு விட்டு வேகமாக சென்றுள்ளார். பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு ஆட்டோ ஓட்டுனரைப் பிடிக்க இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார் யாகேஷ்.

அப்போது ஆட்டோவை முந்திவிட்டு அதற்கு முன்னாள் சென்று பைக்கை அவர் நிறுத்தி ஆட்டோவை நிறுத்த சொல்லியுள்ளார். ஆனால் ஆட்டோ ஓட்டுனர் ஆட்டோவை அவர் மேல் மோதி தப்பிச் சென்றுள்ளார். இதில் படுகாயமடைந்த யாகேஷ் சிகிச்சை பலனளிக்காமல் டிசம்பர் 28 ஆம் தேதி உயிரிழந்துள்ளார். தன்னுயிரை தியாகம் செய்து பெண் ஒருவரைக் காப்பாற்றியுள்ள இளைஞரின் வீரம் சிலிர்க்க வைக்கும் விதமாக அமைந்துள்ளது.