ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 15 டிசம்பர் 2018 (18:19 IST)

போராட்டம் வேண்டாம் ப்ளீஸ்: மக்களிடம் கெஞ்சும் தூத்துக்குடி கலெக்டர்

ஸ்டெர்லைட் ஆலையை 3 வார காலத்திற்குள் திறக்கலாம் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
 
தூத்துக்குடியில் கடந்த மே மாதம் நடந்த ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது கலவரம் ஏற்பட்டு, 13 அப்பாவி பொதுமக்கள் போலீஸாரால் சுட்டு கொல்லப்பட்டனர். 
 
இதனையடுத்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டது. அதன்படி ஆலையும் மூடப்பட்டது. இதனை எதிர்த்து ஆலை நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. 
 
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த தேசிய பசுமை தீர்ப்பாயம், 3 வார காலத்திற்குள் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. 
 
ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை கண்காணிக்க தனியாக குழு அமைக்கவும் உத்தரவிட்டுள்ளது. இதனால் மக்கள் பலர் கடும் அதிருப்தியில் ஆழ்ந்துள்ளனர். 
எக்காரணத்தைக் கொண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் என மார்தட்டிய தமிழக அரசு இந்த உத்தரவால் அதிர்ச்சியில் உள்ளது. மேலும், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உள்ளதாகவும் அறிவித்துள்ளது. 
 
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. எனவே மக்கள் எந்த விதமான அச்சமும் இல்லாமல் இருக்க வேண்டும். 
 
சட்டம் ஒழுங்கு தொடர்பாக காவல்துறையினருடன் ஆலோசித்து, பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும். சட்டம், ஒழுங்கு பாதிக்கும் வகையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் எவ்வித போராட்டங்களிலும் ஈடுபட வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.