வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 1 ஏப்ரல் 2019 (07:47 IST)

தினகரன் கட்சி வேட்பாளருக்கு சிக்கலை கொடுத்த 3 பொன்னுத்தாய்கள்

பிரபல கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் அந்த பிரபலத்தின் பெயருடையவர்களை போட்டியிட வைத்து குழப்பம் ஏற்படுத்தும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருவது தெரிந்ததே. அந்த வகையில் தென்காசியில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளரான புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமியை எதிர்த்து அமமுகவின் பொன்னுத்தாய் என்பவர் போட்டியிடும் நிலையில் அதே பெயரில் உள்ள மூன்று பேர் சுயேட்சையாக போட்டியிடுகின்றனர். இதனால் வாக்காளர்கள் குழப்பம் அடைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
இதுகுறித்து அமமுக வேட்பாளர் பொன்னுத்தாய் கூறும்போது, எங்கள் சின்னம் பரிசுப் பெட்டகம் என்று தொகுதி மக்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும்.  ஆனால், என்னுடைய பெயரில் மேலும் 3 பொன்னுத்தாய்களை எனக்கு எதிராக நிறுத்தி உள்ளனர். இந்த தொகுதியில் திமுகவுக்கும் எனக்கும்தான் நேரடிப் போட்டி உள்ளது. நான் வெற்றி பெறுவதை தடுக்க இப்படி குறுக்கு வழியில் குழப்பத்தை ஏற்படுத்த நினைத்துள்ளனர். ஆனால் அதையும் மீறி பரிசுப் பெட்டகம் வெற்றி பெறும் என்று கூறினார். இந்த தொகுதியின் திமுக வேட்பாளர் தனுஷ் எம்.குமார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த தொகுதியில் மூன்று பொன்னுத்தாய்களை நிறுத்தியது திமுகவினர்களா? அல்லது அதிமுகவினர்களா? என்பது தெரியவில்லை என்றாலும் அமமுக வேட்பாளர் மீது இரு கட்சிகளுக்கும் பயம் உள்ளது என்பது மட்டும் அப்பட்டமாக தெரிவதாக அந்த தொகுதி மக்கள் கூறி வருகின்றனர்.