1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Thirupur people appriciate admk mp sathyabama

ஓடி சென்று உதவும் அதிமுக எம்.பி. - குவியும் பாராட்டுகள்

Sathyabama
உதவி என்று கேட்டால் போதும், எங்க ஊர் பெண் எம்.பி ஸ்கூட்டர் எடுத்துக் கொண்டு வந்து வீட்டிற்கு விடுவார் உதவி செய்ய, அவர் எம்.பி இல்லைங்க எங்க வீட்டு செல்லக்குழந்தைங்க! என திருப்பூர் தொகுதி மக்களவை பெண் எம்.பி சத்தியபாமாவை அப்பகுதி மக்கள் பாரட்டுகின்றனர்.

 
திருப்பூர் தொகுதி எம்பி சத்யபாமாவின் குடும்பச் சிக்கல் தொடர்பாக அண்மையில் செய்திகள் வந்தன. கணவரை பிரிந்து அவர் வாழ்த்து வருகிறார். சமீபத்தில் அவரை தாக்க வந்த அவரின் கணவர் கொலை முயற்சி பிரிவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 
 
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த எம்.பி., சத்தியபாமா., இவர் எம்.ஏ முடித்த பட்டதாரி, 46 வயதாகும், (22-03-72) இந்த பெண்மணி, ஏற்கனவே அ.தி.மு.க வின் தலைமை செயற்குழு உறுப்பினராகவும், ஈரோடு புறநகர் மாவட்ட மகளிர் அணி செயலாளராகவும், இருந்தவர். ஈரோடு மாவட்டம், கோபி செட்டிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவராகவும், அதே கோபி செட்டிப்பாளையம் நகரமன்ற துணை தலைவராகவும் இருந்துள்ளார்.
 
இவர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவராக இருந்த போது, 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், அவருக்கு திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு வேட்பாளராக கட்சி அறிவித்து பல்வேறு சூறாவளி தேர்தலை சந்தித்தார். சுமார் ஒரு லட்சத்து 75 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில், வெற்றி பெற்றார். 

 
அன்று முதல் இன்று வரை அதாவது கவுன்சிலர் முதல் இன்று வரை எம்.பி யாக இருந்த போதும் கூட எங்கே சென்றாலும், ஆடம்பரம் இல்லாமல், எளிமையாகவும், ஸ்கூட்டரில் சென்று மக்களோடு மக்களாக சென்று தான் இன்று வரை பிரச்சினைகளை கேட்டு வருகின்றார்.
 
ஆனால் அனைவரும் ஆச்சரியப்படும் விதமாக, சத்யபாமாவின் கணவரே அவரைப் பற்றித் தவறாகச் சொன்ன போதும் அவற்றை அப்பகுதி மக்கள் முற்றாகப் புறக்கணித்துவிட்டனர். மாறாக அவரைப் பாராட்டிப் பேசுகின்றனர். கட்சி கடந்து பொதுமக்களால் நேசிக்கப் படுகிற அரசியல் தலைவராக அவர் உருவெடுத்திருக்கிறார்.
 
டெல்லியில் ஒவ்வொரு துறை அமைச்சரையும் சந்தித்து ஏதாவது ஒரு கோரிக்கையை முன் வைத்துக் கொண்டேயிருக்கிறார். கூடுதல் ரயில் வேண்டும் என ரயில்வே மந்திரியைச் சந்திக்கிறார். ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தக் கோரி ராணுவ அமைச்சரைச் சந்திக்கிறார். ஜி.எஸ்.டி சம்பந்தமாக நிதியமைச்சரைச் சந்தித்திருக்கிறார்.

 
செய்கிறார்களோ இல்லையோ- இவர் விடாமல் துரத்துகிறார். எய்ம்ஸ் மருத்துவமனையை பெருந்துறையில் கொண்டு வர வேண்டும் என பாராளுமன்றத்தில் பேசியிருக்கிறார். சத்யபாமா எம்.பி குறித்து நிறையச் செய்திகள் உலவுவதுண்டு. எதிர்மறையான செய்திகள். இவரது செயல்பாடுகளையெல்லாம் பார்த்துவிட்டு உள்ளூர்வாசிகளிடம் விசாரித்தால் மற்ற அரசியல்வாதிகளைவிடவும் வித்தியாசமான அரசியல்வாதிதான் என்கிறார்கள். 
 
மத்திய அரசின் ஏ.டி.ஐ.பி (Assistance to Disabled persons for Purchasing/Fitting Aids/Appliances) என்றொரு திட்டமிருக்கிறது. மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வாங்குவதற்கான திட்டம் அது. ஆனால் பதிவு செய்து வைத்தால் வெகு காலம் பிடிக்கும். இப்படியொரு திட்டமிருப்பதைக் கண்டறிந்து மத்திய சமூக நலத்துறை அமைச்சர் தாவர் சந்த் அவர்களைச் சந்தித்து விண்ணப்பம் கொடுத்திருக்கிறார் எம்.பி. திருப்பூர் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு விரைவாக உதவியை வழங்கும்படி அமைச்சர் பரிந்துரை செய்திருக்கிறாராம்.
 
ஜெயலலிதாவைத் தலைவராக ஏற்றுக்கொண்ட சத்யபாமா, அவரைப் போலவே சோதனைகளைச் சாதனைகளாக மாற்றும் இரும்புப் பெண்மணியாக உருவெடுத்திருப்பது பெண் அரசியல்வாதிகளுக்கு நம்பிக்கையூட்டும் செயல்.
 
இந்நிலையில் அவரது புகழுக்கு களங்கள் விளைவிக்கும் வகையில், சமூக வலைதளங்களில் சித்தரித்து வருகின்றனர் என்பது தான் கேள்விக்குறியான ஒன்றாகும்.

- சி.ஆனந்தகுமார் - கரூர் செய்தியாளர்
அடுத்த கட்டுரையில்
காவிரி மற்றும் ஸ்டெர்லைட் விவகாரம் : தென்னிந்திய நடிகர் சங்கம் உண்ணாவிரதம்