1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 20 மே 2020 (10:00 IST)

குறைய தொடங்கிய குடி மோகம்! – வசூல் குறைந்த டாஸ்மாக் விற்பனை!

ஊரடங்கினால் நீண்ட நாட்கள் கழித்து திறக்கப்பட்ட டாஸ்மாக்குகள் அதிகமாக வசூல் செய்த நிலையில் தற்போது விற்பனை குறைய தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருவதால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இந்நிலையில் இடையே திறக்க அரசு முன் வந்தபோது உயர்நீதிமன்ற உத்தரவால் மூடப்பட்டது. இதுகுறித்த மேல் முறையீட்டில் உச்சநீதிமன்றம் கடைகளை திறக்க அனுமதி வழங்கியது. அதை தொடர்ந்து நேற்று முன் தினம் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.

நீண்ட நாட்கள் கழித்து மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் உற்சாகத்துடன் குவிந்த மதுப்பிரியர்கள் பல மணி நேரம் வரிசையில் நின்று மதுவை வாங்கி சென்றனர். முதல் நாள் அன்று மட்டும் 163 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆகியிருந்த நிலையில், அடுத்த நாள் 133 கோடி ரூபாயாக விற்பனை குறைந்தது. நாளுக்கு நாள் மதுக்கடைகளில் வரிசையில் நிற்போர் எண்ணிக்கையும் குறைய தொடங்கியுள்ளது. திருவாரூர் மற்றும் அரியலூர் உள்ளிட்ட பகுதிகளில் சில டாஸ்மாக் கடைகளில் ஆளரவமின்றி வெறிச்சோடி காணப்பட்டுள்ளன.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் நேற்று மது விற்பனை 91.5 கோடியாக உள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டதால் மதுக்கடைகள் மீது படையெடுத்த மது பிரியர்கள் தற்போது சாவகாசமாக வந்து வாங்கி செல்கின்றனர். கடந்த சில நாட்களாக மது விற்பனையில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்த மதுரை மாகாணத்தில் நேற்று விற்பனை மந்தமான நிலையில், திருச்சி முதலிடத்தை பெற்றுள்ளது. திருச்சி, மதுரை மற்றும் சேலம் ஆகிய மண்டலங்களில் டாஸ்மாக் வசூல் 20 கோடிக்கும் அதிகமாக உள்ளது.