1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 12 அக்டோபர் 2021 (12:24 IST)

எந்த கட்சிக்கு ஓட்டு போடலாம்? எல்லா சின்னத்திலும் குத்திவிட்ட நபர்! – தேர்தல் சுவாரஸ்யங்கள்!

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் நடந்து வரும் நிலையில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்துள்ளன.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் நடந்து முடிந்தது. இதில் தமிழக முக்கிய கட்சிகள் பலவும் போட்டியிட்டன. இந்நிலையில் இன்று காலை முதலாக வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் வாக்கு எண்ணும் பணியில் பல சுவாரஸ்யமான சம்பவங்களும் நடந்து வருகின்றன. திருச்சி அருகே சிறுமருதூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கடல்மணி என்பவர் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இதுபோல விழுப்புரம் மாவட்டத்தில் காணை ஊராட்சி வாக்குகள் எண்ணப்பட்ட போது வடிவேலு காமெடியில் “தென்னைமரத்துல ஒரு குத்து.. ஏணியில ஒரு குத்து” என சொல்வது போல, ஒருவர் வாக்கு சீட்டில் உள்ள அனைத்து சின்னங்களிலும் முத்திரை குத்தி வைத்துள்ளார். இதனால் அது செல்லாத ஓட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.