ரூ.2,000-க்கு மேற்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணமா? அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை..
இந்தியாவின் இலவச யுபிஐ கட்டண முறை கொள்கையில் விரைவில் முக்கிய மாற்றங்கள் வரக்கூடும். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த செலுத்துதல் மற்றும் தீர்வு முறைமை சட்டத் திருத்தத்தின் மூலம், எதிர்காலத்தில் தேர்வுசெய்யப்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு வர்த்தக கட்டணம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தற்போது எந்த கட்டணமும் உடனடியாக விதிக்கப்படவில்லை என்றாலும், இதற்கான சட்ட பூர்வமான கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி, ஆண்டுக்கு ரூ.1.5 கோடிக்கு மேல் விற்றுமுதல் கொண்ட பெரிய வர்த்தகர்களின் ரூ.2,000-க்கு மேற்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 0.3% முதல் 0.5% வரை வர்த்தகக் கட்டணம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதன் மூலம் சிறிய வியாபாரிகளும், சாதாரணப் நுகர்வோர்களும் பாதிக்கப்பட மாட்டார்கள்.
இலவசமாக சேவை வழங்கி வரும் ஃபின்டெக் நிறுவனங்கள், தங்களின் தொழில்நுட்பக் கட்டமைப்பை மேம்படுத்தவும் வணிகத்தை நீடிக்கச் செய்யவும் கட்டணம் விதிக்கப்பட வேண்டும் என நீண்டநாட்களாகக் கோரி வந்தன. Jefferies அமைப்பின் ஆய்வின்படி, ரூ.2,000-க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகள் மொத்த மதிப்பில் 67% பங்கைக் கொண்டுள்ளன. இதன் மூலம் டிஜிட்டல் சேவை நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5,000 கோடி முதல் ரூ.10,000 கோடி வரை வருவாய் ஈட்ட முடியும்.
இருப்பினும், அரசு இதுகுறித்து இறுதி முடிவை இன்னும் அறிவிக்கவில்லை. அதுவரை யுபிஐ பயன்பாடு தொடர்ந்து முழுமையாக இலவசமாகவே நீடிக்கும்.
Edited by Siva
