1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (13:04 IST)

வாகன ஊர்வலத்திற்கு தடை; பொதுக்கூட்டத்திற்கு அனுமதி! – வெளியானது தேர்தல் கட்டுப்பாடுகள்!

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி தேர்தல் ஜனவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்யும் தேதி இன்றுடன் முடிவடையும் நிலையில் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல், பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தேர்தலில் அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் வெளியாகியுள்ளன. அதன்படி,

சாலை நிகழ்ச்சிகள் நடத்துதல், பாதயாத்திரை, சைக்கிள் , மோட்டார் வண்டிகள் ஊர்வலம் ஆகியவை 11 பிப்ரவரி 2022 வரை தடை செய்யப்பட்டுள்ளது. எனினும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அப்போதைய நிலையை கருத்தில் கொண்டு அனுமதி அளிக்கப்படும்.

தேர்தல் தொடர்பாக அனுமதி பெற்று நடத்தப்படும் பொதுக்கூட்டங்களில் அதிகபட்சம் 1000 நபர்கள் அல்லது பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்தின் பரப்பளவில் 50 சதவீதம் மக்கள் அனுமதிக்கப்பட வேண்டும்.

உள் அரங்க கூட்டங்களில் அதிகபட்சம் 500 பேர் அல்லது கொள்ளளவில் 50 சதவீதம் பேர் அனுமதிக்கப்படுவார்கள்.

வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் நபர்களின் எண்ணிக்கை வரையறையை உயர்த்தி பாதுகாவலர்கள் நீங்கலாக 20 நபர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

தேர்தல் நடவடிக்கைகளின் போது, அரசியல் கட்சிகளும், போட்டியிடும் வேட்பாளர்களும் மற்றும் வாக்காளர்களும், பொதுமக்களும் கொரோனா கட்டுப்பாடு தொடர்பான நடத்தை முறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் மற்றும் மாதிரி நடத்தை விதிமுறைகளை இணக்கமாக கடைபிடிப்பதை உறுதிசெய்தல் வேண்டும்

என்று அதில் கூறப்பட்டுள்ளது.