இந்தியாவிலேயே மிக அதிகமாக கடன் வாங்கி இருக்கும் மாநிலம் தமிழ்நாடு.. எச் ராஜா
இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலம் தமிழ்நாடு தான் என்று பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வரும்போது, தமிழகத்திற்கு 4 லட்சத்து 33 ஆயிரம் கோடி கடன் இருந்தது. ஆனால், இப்போது அது 8 லட்சத்து 88 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. வரும் மார்ச் மாதத்திற்குள், இது 9 லட்சத்து 88 ஆயிரம் கோடியாக உருவாகும் என்று பாஜக மூத்த தலைவர் எச் ராஜா தெரிவித்துள்ளார்.
கிட்டத்தட்ட 4 ஆண்டுகளில் தமிழகத்தின் கடன் இரு மடங்கு உயர்ந்துள்ளது என்றும், எனவே இந்தியாவிலேயே கடனாளி மாநிலம் தமிழகம் தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோவையில், கடந்த 2004 ஆம் ஆண்டு 2,400 ரூபாய் வீட்டு வரியாக இருந்த நிலையில், அதே வீட்டிற்கு இன்று 56,000 ரூபாய் மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி உள்ளது என்றும், திமுக எம்பி மாநகராட்சி கூட்டத்தில் இதனை கூறியுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.
மாநகராட்சி நிர்வாகத்திற்கு உள்ளாட்சித் துறை அமைச்சர்களுக்கும் எந்தவித கட்டுப்பாடும் இல்லையா என்று எச். ராஜா கேள்வி எழுப்பி உள்ளார்.
Edited by Siva