தைப்பூசத்தை முன்னிட்டு பழனி முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தரும் நிலையில் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
முருகன் கோவில்களில் தைப்பூச திருவிழா நாளை (பிப்ரவரி 11) கோலாகலமாக நடைபெற உள்ளது. இதற்காக முருகனின் அறுபடை வீடுகள் உள்ளிட்ட பல கோவில்களிலும் கொடியேற்றம் நடத்தப்பட்டு தைப்பூச விழா கடந்த ஒரு வாரமாக கோலாகலமாக நடைபெற்று வருகிறது. முருகனின் அறுபடை வீடுகளில் 3ம் படைவீடான பழனி கோவிலில் பக்தர்கள் பால்குடம், காவடி என எடுத்துக் கொண்டு கோவில்களுக்கு ஊர்வலமாக வரும் நிலையில் ஊரே திருவிழாக் கோலமாக காணப்படுகிறது.
தைப்பூசத்திற்காக பலரும் பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக வந்துக் கொண்டிருப்பதால் பல வழிகளிலும் அவர்களுக்கு உணவு, குடிநீர், தங்கும் வசதிகளை அப்பகுதி முருக பக்தர்கள் வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் தைப்பூச திருவிழாவையொட்டி பழனி முருகன் கோவிலில் இன்று முதல் 3 நாட்களுக்கு கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தரிசன கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் அனைவரும் இலவச தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பழனிக்கு பக்தர்கள் ஏராளமாக வருகை தருவதால் 100 காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு, 3,500 போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Edit by Prasanth.K