1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By VM
Last Updated : புதன், 3 ஏப்ரல் 2019 (10:41 IST)

ஸ்டெர்லைட் ஆலை நிலைப்பாடு: தேங்காய் போல் போட்டுடைத்த கனிமொழி

ஸ்டெர்லைட் ஆலை எப்போதும் திறக்கப்பட கூடாது என்பதே தன்னுடைய நிலைப்பாடு என தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி விளக்கம் அளித்துள்ளார்.
 
தூத்துக்குடி ஸ்டெர்லைட் குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிக்குமாறு டுவிட்டர்வாசி ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு பதில் அளித்து கனிமொழி வெளியிட்டு உள்ள வீடியோவில், நிச்சயமாக இங்கே இருக்கக்கூடிய மக்கள் தொடர்ந்து காற்று மாசுபடுகிறது. தண்ணீர் மாசுபடுகிறது, குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது என்பதற்காகத்தான் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து தொடர்ந்து போராடி கொண்டு வருகிறார்கள். நிச்சயமாக இப்போது மூடப்பட்டிருக்கும் ஸ்டெர்லைட் இனி எந்த காரணத்திற்காகவும் திறக்கக் கூடாது என்பதே என் நிலைப்பாடு.  இதற்காகப் போராடிய மக்களுடன் எப்போதும் உறுதியாக துணை நிற்பேன். இதைத் தாண்டி 13 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அந்தக் குடும்பங்களுக்கு நியாயம் நிச்சயம் வழங்கப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இது அரசாங்கமே ஏற்படுத்திய கலவரத்தால் நடந்திருக்கக் கூடிய துப்பாக்கிச்சூடு. நிச்சயமாக இதற்குப் பின்னணியில் இருந்து இயக்கியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது. தலைவர் கலைஞரைப் போல அவரது மகளான எனக்கு தமிழிசை மீது மதிப்பும் மரியாதையும் எப்போதும் உண்டு .அவர் தூத்துக்குடி பற்றி இன்னும் நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் இவ்வாறு கனிமொழி வீடியோவில் கூறியுள்ளார்.