செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 4 ஆகஸ்ட் 2018 (15:04 IST)

பொன்மாணிக்கவேலை தடுக்கும் தமிழக அரசு - ஸ்டாலின் காட்டம்

சிலை கடத்தல் விவகாரத்தில் தமிழக அரசு சிபிஐ விசாரணை கோருவதில் ஏதோ மர்மம் இருப்பதான ஸ்டாலின், வைகோ, கருணாஸ், உள்ளிட்டோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
சிலை கடத்தல் தடுப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதும், அவர் அதிரடியாக செயல்பட்டு பல திருட்டு சம்பவங்களை கண்டறிந்தார். பல கோவில்களில் சிலைகள் திருடப்பட்டு போலி சிலைகள் வைக்கப்பட்டதை கண்டுபிடித்தார். அதோடு, தமிழகத்தில் 70 சதவீத கோவில்களில் போலியான சிலைகளே இருப்பதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினர். அதோடு, தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்டு வெளிநாட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட சில விலை மதிப்புடையை சிலைகளை அவர் மீட்டு தமிழகத்திற்கு கொண்டு வந்தார்.
 
ஆனால், தமிழக அரசுக்கு அவர் சரியான தகவலை அளிக்கவில்லை எனக்கூறி சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் இருந்து தமிழக அரசு அவரை பலமுறை நீக்க முயற்சி செய்தது. ஆனால், நீதிமன்றம் தலையிட்டு அவர் அந்த பணியிலேயே தொடர வேண்டும் என உத்தரவிட்டது. 
இந்த வழக்கு  சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வாதாடிய அரசு தரப்பு வழக்கறிஞர் “ காவல் துறையினர் விசாரணை நடத்திய வர இந்த வழக்கு சரியாகவே சென்றது. ஆனால், சிலை கடத்தல் தடுப்புப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்ட பின் விசாரணையில் வெளிப்படை தன்மையில்லை. எனவே வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.
 
ஆனால், சிலை கடத்தல் தொடர்பான விசாரணையை வெளிப்படையாக கூற முடியாது. தன்னிடமுள்ள ஆவணங்களை பெறுவதற்கு மட்டுமே அரசு முயற்சிப்பதாக பொன். மாணிக்கவேல் குற்றம் சாட்டினார்.
கொள்கை முடிவு எடுத்து அதனை நீதிமன்றத்தில் சம்ர்பித்தால் வழக்கு சிபிஐக்கு மாற்றப்படும் என நீதிமன்றம் தெரிவித்தது. தமிழக அரசும் நேற்று கொள்கை முடிவு எடுத்து வழக்கை சிபிஐ வசம் மாற்ற அரசாணை வெளியிட்டது.
 
இதுகுறித்து பேசிய ஸ்டாலின், கருணாஸ், வைகோ உள்ளிட்டோர் சிலை கடத்தல் விவகாரத்தில் பல முக்கிய புள்ளிகளுக்கு  தொடர்புள்ளதை பொன். மாணிக்கவேல் கண்டுபிடித்துள்ளார். பல வருடங்களாக தமிழக கோவிலில் உள்ள முக்கிய சிலைகளை கடத்தி அவர்கள் வெளிநாட்டிற்கு விற்பனை செய்து வந்துள்ளனர். இந்த விவகாரம் வெளியே வரக்கூடாது என அரசுக்கு சிலர் நெருக்கடி கொடுத்து வருவதாகவும், இதன் காரணமாகவே நேர்மையாக செயல்படும் பொன்.மாணிக்கவேலிடமிருந்து வழக்கு சிபிஐ வசம் கொடுக்கப்பட்டுள்ளது என அவர்கள் குற்றம் சாட்டினர்.

மேலும் சிலை கடத்தல் பற்றி ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் தொடர்ந்து விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின், வைகோ கூறியுள்ளனர்.

தமிழக அதிகாரிகள் விசாரிப்பதை நம்பாமல் தமிழக அரசு, வழக்கை சிபிஐ வசம் கொடுத்துள்ளது தமிழகத்தை கேலிக்கு ஆளாக்கும் விதமாக உள்ளது என பலர் கூறி வருகின்றனர்.