பொங்கல் பரிசு ரூ.3000.. அப்புறம் ஒரு ரூ.5000.. இன்று புதுசா ரூ.2000.. வாரி வழங்கும் முதல்வர் ஸ்டாலின்..!
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு தரப்பினருக்கான சிறப்பு நிதி உதவிகளை அதிரடியாக அறிவித்துள்ளார்.
ஏற்கனவே மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், அடுத்த மூன்று மாதங்களுக்கான தொகையுடன் கோடைக்கால சிறப்பு நிதியாக 2,000 ரூபாய் சேர்த்து மொத்தம் 5,000 ரூபாய் வழங்கப்பட்டதற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. அதுமட்டுமின்றி பொங்கல் பரிசாக ரூ.3000 வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, சமூகத்தின் விளிம்புநிலையில் உள்ள 29 லட்சம் முதியோர், கைம்பெண்கள் மற்றும் திருநங்கையர்களுக்கு மார்ச் மாத ஓய்வூதியத்துடன் கூடுதலாக 2,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்களுக்கு 3,200 ரூபாய் வரை கிடைத்துள்ளது.
அதேபோல், 5.92 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு 3,500 ரூபாயும், பராமரிப்பு உதவி பெறுவோருக்கு 4,000 ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மீனவ குடும்பங்களுக்கான மீன்பிடி தடைக்கால நிவாரணமாக 8,000 ரூபாயும், நீலகிரி தேயிலை விவசாயிகளுக்கு ஆதார விலையாக 8.53 கோடி ரூபாயும் விடுவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் வளர்ச்சி பயணத்தில் ஒருவரையும் பின்தங்க விடமாட்டோம் என முதல்வர் இந்த அறிவிப்பின் மூலம் சூளுரைத்துள்ளார்.
Edited by Siva