1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 3 ஜூன் 2022 (10:39 IST)

சித்து மூஸ் வாலாவை கொன்ற 19 தோட்டாக்கள்! – பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்!

Siddhu Moose Wala
பஞ்சாப் மாநிலத்தில் மிகப்பிரபல பாடகராகவும், காங்கிரஸ் உறுப்பினருமாக இருந்த சித்து மூஸ்வாலா கொல்லப்பட்ட நிலையில் அவருடைய பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.

பஞ்சாபில் பிரபல பாடகராகவும், காங்கிரஸ் கட்சி பிரமுகராகவும் இருந்து வந்தவர் சித்து மூஸ்வாலா. நடந்து முடிந்த பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் மன்சா தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் விஜய் சிங்லாவை எதிர்த்து போட்டியிட்ட சித்து தோல்வியடைந்தார்.

சித்து மூஸ்வாலா உயிருக்கு ஆபத்து இருப்பதாக முன்னதாக அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. தற்போது ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்த நிலையில் அந்த பாதுகாப்பை ரத்து செய்தது. இந்நிலையில் ஜீப்பில் ஜவகர் கே கிராமத்திற்கு சென்றுக் கொண்டிருந்த சித்துவை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதை தொடர்ந்து பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ள நிலையில் இன்று சித்துவின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் சித்துவின் உடலில் 19 குண்டுகள் பாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடலின் வலது பக்கத்தில் அதிகமான குண்டு காயங்கள் ஏற்பட்டுள்ளன. சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் மற்றும் முதுகெலும்பிலும் தோட்டாக்கள் பாய்ந்த நிலையில் இதயம் செயலிழந்து அவரது உயிர் 15 நிமிடங்களில் பிரிந்து விட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.