இனிமேல் ஆன்லைன் மூலம் மட்டுமே டெண்டர்.. இந்து சமய அறநிலையத்துறையின் அதிரடி முடிவு..
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் திருக்கோயில்களில், இனிவரும் காலங்களில் ஆன்லைன் மூலம் மட்டுமே டெண்டர் மற்றும் பொது ஏலம் விடும் புதிய முறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
இதுவரை கோயில்களில் நடைபெறும் வணிக வளாகங்கள், குத்தகை உரிமைகள் மற்றும் பிற பணிகளுக்கான ஒப்பந்தங்கள் நேரடி பொது ஏலம் மூலமாகவே நடத்தப்பட்டு வந்தன. இதில் அதிக வருவாய் ஈட்டி தரும் ஒப்பந்ததாரர்களுக்கு டெண்டர் ஒதுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், நிர்வாகத்தில் கூடுதல் வெளிப்படைத்தன்மையை கொண்டு வரவும் முறைகேடுகளை தவிர்க்கவும் இத்துறையில் ஆன்லைனில் மட்டுமே டெண்டர் விட தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த ஆன்லைன் ஏல நடைமுறையைத் திறம்பட செயல்படுத்தும் பொருட்டு, அறநிலையத்துறை ஊழியர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. அதன்படி, ஆகஸ்ட் 13 மற்றும் 16 ஆகிய தேதிகளில் ஆன்லைன் மூலம் பொது ஏலம் மற்றும் ஒப்பந்தப்புள்ளி நடத்துவது குறித்து துறையின் பணியாளர்களுக்கு விரிவான பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இப்புதிய மாற்றத்தின் மூலம் கோயில் ஏலங்களில் முறைகேடுகள் தடுக்கப்பட்டு, அறநிலையத்துறைக்குக் கூடுதல் வருவாய் கிடைக்கும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva
