வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 15 ஏப்ரல் 2019 (13:52 IST)

லாரன்ஸிடம் மன்னிப்புக் கேட்ட சீமான்

சமூகவலைதளங்களில் நடிகர் லாரன்ஸை நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் தவறாக விமர்சிப்பதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு சீமான் வருத்தம் தெரிவித்துள்ளார்.

நடிகர் ராகவா லாரன்ஸுக்கும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சிலருக்கும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வாக்குவாதம் நடைபெற்று வருகிறது. நாம் தமிழர் கட்சியினர், ராகவா லாரன்ஸ் செய்து வரும் தொண்டுகள் பற்றி தொடர்ந்து தவறாக விமர்சிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதையடுத்து லாரன்ஸ் நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் ‘வளர்ந்து வருகிற ஒரு அரசியல் தலைவருக்கும் அவரது தொண்டர்களுக்கும் ஒரு வேண்டுகோள் மற்றும் எச்சரிக்கை.  இது யாருக்கு புரிகிறதோ இல்லையோ, குறிப்பிட்ட அந்த அரசியல் தலைவருக்கும் அவரது ஒரு சில தொண்டர்களுக்கும் புரிந்தால் போதும்! அண்ணா வணக்கம்! உங்களுக்கு நினைவு இருக்கும் என்று நினைக்கிறேன்!

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உங்கள் மேடைப் பேச்சை கேட்டுவிட்டு நானே உங்களுக்கு போன் செய்து "அண்ணே நீங்கள் மேடையில் பேசியதை நான் கேட்டேன்! மிகவும் அருமையாக இருந்தது நீங்கள் நல்லா வர வேண்டும்" என  மனதார வாழ்த்தினேன்! அதற்குத் தாங்கள் நன்றியும் மகிழ்ச்சியும் தம்பி?  என தெரிவித்திருந்தீர்கள். அதன் பிறகும்... இரண்டு மூன்று முறை போனில் உங்களிடம் பேசி இருக்கிறேன்!  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு போராட்டத்திற்கு ஒரு நல்ல விஷயத்தை செய்திட, சேவை மனப்பான்மையோடு சென்றிருந்தேன் அதை செவ்வனே செய்து விட்டு வழக்கம் போல் அமைதியாக எனது வேலைகளை செய்துகொண்டு இருந்தேன்.

ஆனால்  நீங்கள் தான் முதன் முதலில் உங்களது மேடையில்,  எனது பெயரை இழுத்து, என்னையும் எனது ரசிகர்களையும், தன்னலமற்ற எனது சேவைகளையும்,  தரமற்ற முறையில் கொச்சைப்படுத்தி பேசினீர்கள். அப்பொழுது எனக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. எனக்கும் அண்ணனுக்கும் எந்த ஒரு பிரச்சினையும்  இல்லையே பிறகு ஏன் அண்ணன் இப்படி தப்பு தப்பாக பேசுகிறார்" என எனது நண்பர்களிடம் கேட்டேன். அவர்கள் சொன்னது, ஒன்று அரசியலாக இருக்கலாம் அல்லது பயமாக இருக்கலாம்"  என்றார்கள். அப்பொழுதுதான்  இது அரசியல் என்று நான் புரிந்து கொண்டேன்!

அதே சமயம் நீங்கள் அப்படி என்னைப்பற்றி பேசியதற்கு  நான் பதில் சொல்லும் பொழுது கூட  உங்களைப்பற்றி மிக மரியாதையோடு தான் பேசினேன்!  இது அச்சமயத்தில் அனைவருக்குமே தெரியும்! "சரி இந்த விஷயம் அத்தோடு முடிந்து விட்டது" என நான் என்னுடைய திரைப்பட பணியையும்,  பொது சேவையையும் அமைதியாக செய்து கொண்டு இருக்கிறேன்!

என்னைப்பற்றி தரக்குறைவாக நீங்கள் பேசி விட்டுப் போய் விட்டீர்கள். ஆனால் உங்கள் பேச்சால் தூண்டிவிடப்பட்ட  உங்களுடைய ஒரு சில தொண்டர்கள்   என்னை எதிரியாகவே இன்றளவும் பாவித்து வருகிறார்கள்! நீங்கள் என்னை  தவறாகப் பேசியதையும், அதற்கு  நான் நாகரீகமாக பதில் சொன்னதையும், முடிந்துபோன ஒரு விஷயமாய் விடாமல் உங்களுடைய ஒரு சில தொண்டர்கள் எனது சேவை சம்பந்தப்பட்ட பதிவுகள் போடப்படும் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் ஆப் போன்ற வலைதளங்களில் கமெண்ட்ஸ் என்கிற பெயரில் தப்புத்தப்பான வார்த்தைகளில் கொச்சையாகவும், அசிங்கமாகவும்  நாலாந்தர நடையில் பதிவிடுகிறார்கள்!  அது எனக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியது

ஏதேனும் பொது நிகழ்ச்சிகளுக்கு நான் போகும்போது கூட  உங்களது ஒரு சில தொண்டர்கள் அங்கு வந்து மிகவும் நாகரீகமற்ற முறையில் மறைமுகமாக பேசுகிறார்கள்! இவையெல்லாம், எப்பொழுது நீங்கள் மேடையில் என்னைப் பற்றி தவறாக பேசினீர்களோ, அப்பொழுதிருந்தே இது நடந்து வருகிறது. நான் இதைப் பற்றியெல்லாம் கவலைப் படுவதில்லை! ஆனால் மாற்றுத்திறனாளிகளான எனது பசங்க,  நிகழ்ச்சி நடத்த எங்கு சென்றாலும், அவர்களை சொல்லொண்ணா வார்த்தைகளாலும் செயல்களாலும் உங்களது ஒரு சில தொண்டர்கள் மனம் புண்படும்படி பேசுகிறார்கள்!

இவ்வளவு நாள் பொறுமையாக தான் இருந்தேன் ஆனால் உங்களது ஒரு சில தொண்டர்களின் செயல்பாடுகள் தற்பொழுது எல்லை மீறி போகிறது. 
கடந்த வாரம் கூட இந்த கசப்பான சம்பவம் நடந்துள்ளது!  அதை மாற்றுத்திறனாளிகளான  எனது பசங்க என்னிடம் கூறி,  மிகவும் வருத்தப்பட்டார்கள்!  அதற்காகத்தான் இந்தப் பதிவு!

இறுதியாக ஒன்றை மட்டும் உறுதிபட  கூறுகிறேன். எனக்கு எது நடந்தாலும் அதைத் தாங்கிக் கொள்வேன்! ஆனால் மாற்றுத்திறனாளிகளான என் பசங்களுக்கும் பாசமிக்க எனது ரசிகர்களுக்கும், ஏதாவது ஒரு சிறு தொந்தரவு ஏற்பட்டாலும்  என்னால் தாங்கிக் கொள்ள முடியாது!. ஏனென்றால் அவர்கள் எனது பிள்ளைகள் மாதிரி. உங்களது ஒரு சில தொண்டர்களால் எனக்கு ஏற்பட்ட பிரச்சினை போலவே,  தமிழகத்தில் உள்ள பல அரசியல் தலைவர்களுக்கும் எனது சக  திரைப்பட நண்பர்களுக்கும், உங்களின் ஒரு சில தொண்டர்களால் தொடர்ந்து ஏற்படுகிறது என்பதை  இந்த நேரத்தில் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்! எனவே, உங்களுடைய "அந்த ஒருசில தொண்டர்களை" அழைத்து தப்புத்தப்பாக என்னைப்பற்றி பேசுவதையும் எழுதுவதையும் கண்டிப்பாக தவிர்க்கும் படி கூறிடுங்கள்!

பொதுவாக தாங்கள் அனைவரையுமே தம்பி, தம்பி என்றுதான் அழைக்கிறீர்கள். அந்த தம்பியில் ஒருத்தனாக கேட்கிறேன். எந்த அண்ணனும் தனது தம்பியோட வளர்ச்சியை பார்த்து ரசிக்கத்தான் செய்யனும், அந்தத் தம்பியின் வளர்ச்சியை அழிக்க வேண்டுமேன நினைக்கக்கூடாது!  நான் எந்த ஒரு பேக் கிரவுண்டும் இல்லாமல் கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு முன்னேறி வந்து இருக்கிறேன் இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்! இதற்கு மேலும் உங்களுடைய ஒரு சில தொண்டர்கள் இந்த பிரச்சனையில் எனக்கும் எனது மாற்றுத்திறனாளி பசங்களுக்கும் தொந்தரவு  கொடுத்து வந்தால்?  எச்சரிக்கை தான்! அந்த எச்சரிக்கை என்னவென்றால்?  "எனக்கு "இந்த அரசியல்" எல்லாம் தெரியாது!  அரசியலைப் பொருத்தவரை நான் ஒரு ஜீரோ! முன்பு நடனத்தில் கூட நான் ஜீரோவாகத்தான் இருந்தேன்,  பிறகு கற்றுக் கொண்டேன்!  டைரக்‌ஷன் கூட எனக்கு ஜீரோவாகத்தான் இருந்தது,  பிறகு கற்றுக்கொண்டேன்! படத்தயாரிப்புக் கூட எனக்கு ஜீரோவாகத்தான் இருந்தது, பிறகு கற்றுக்கொண்டேன் . அரசியலில் இப்பொழுது கூட நான் ஜீரோவாகத்தான் இருக்கிறேன், அதில் "ஹீரோவாக்கி" என்னை அரசியலில் இழுத்து விடாதீர்கள்!

நீங்கள் பேச்சை அதிகமாக பேசுவீர்கள்! நான் சேவையை அதிகமாக செய்வேன்! மக்களுக்கு பேசுகிறவர்களை விட, செயலில் காட்டுகிறவர்களைத்தான் அதிகம் பிடிக்கும்!   நாமிருவரும் ஏதேனும் ஒரு பொதுவிவாத மேடையில் அமர்ந்து  நீங்கள் மக்களுக்கு  என்ன நன்மைகள் செய்தீர்கள்?  நான் என்னென்ன நன்மைகள் செய்தேன் என பட்டியலிட்டேன் ஏன்றால் உங்களால் பதில் சொல்ல  முடியாது! 

 
நான்,   ஏழைகளுக்கு செய்கிற சேவைகளை, ஆளுங்கட்சி, எதிர்கட்சி உள்பட, மற்றும் அனைத்துக்கட்சி தலைவர்களும் பாராட்டுகிறார்கள்.  எனது தலைவனும்,  என் நண்பனும் கூட,  நான் எந்த உதவி கேட்டாலும் உடனே, செய்து கொடுக்கிறார்கள். செய்தும் வருகிறார்கள். அத்துடன் மனப்பூர்வமாக என்னை  வாழ்த்துகிறார்கள். ஆனால் நீங்களும் உங்களது ஒரு சில தொண்டர்கள் மட்டும் தான், என்னையும் எனது தன்னலமற்ற சேவைகளையும் மிகக் கடுமையாக கேவலப்படுத்தி வருகிறார்கள். அப்புறம் உங்களது பெயரை  நான் இங்கு குறிப்பிடாமல்  இருப்பதற்கு காரணம்? பயம் இல்லை!  நாகரிகம்தான் காரணம்!

 
அது மட்டுமல்லாமல் இது தேர்தல் நேரம் வேறு!  இந்த எனது அறிக்கையின் மூலமாக உங்களுக்கு எந்த வித பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்கிற நல்லெண்ணத்தில் தான் உங்களது பெயரை இங்கு குறிப்பிடவில்லை! தயவுசெய்து என்னையும் எனது மாற்று திறனாளி பிள்ளைகளின் மன உணர்வுகளையும்,  புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். நான் சொல்வது சரி என உங்களுக்கு தோன்றினால் தம்பி வாப்பா பேசுவோம்! என கூப்பிடுங்கள். நானே உங்களது வீட்டுக்கு வருகிறேன். உட்கார்ந்து . மனம் விட்டு பேசுவோம்! சுமூகமாகி அவரவர் வேலையை,  அவரவர் செய்வோம்! நீங்களும் வாழுங்கள்!  வாழவும் விடுங்கள்!  இல்லை இதை பிரச்சனையாகத்தான் நானும் எனது தொண்டர்களும் அணுகுவோம் என நீங்கள் முடிவெடுத்தால் அதற்கும் நான் தயார்!  சமாதானமா?  சவாலா?  முடிவை நீங்களே எடுங்கள்!  சாய்ஸ் யுவர்ஸ்’ என நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அறிக்கையில் சீமான் பெயரைக் குறிப்பிடவில்லை என்றாலும் சீமானுக்காகதான் இந்த அறிக்கை என அனைவரும் புரிந்துகொண்டனர்.

இதுபற்றி சீமானிடம் கேள்வி எழுப்பியபோது ’ லாரன்ஸ் செய்துவரும் சேவை மீது எனக்கு மரியாதை உண்டு. என் கட்சிக்கு கெட்ட பெயர் உண்டாக்க வேண்டும் என்ற நோக்கில் சிலர் சமூக வலைதளங்களில் செயல்பட்டு வருகின்றனர். அவர்களில் யாராவது இது போல செய்திருக்கலாம். அவர்கள் யாரெனக் கண்டு பிடித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இருந்தாலும் தம்பி லாரன்ஸிடம் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.