வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 8 ஏப்ரல் 2019 (09:04 IST)

நான் தெர்மாக்கோல் ராஜுவானது எப்படி ? – மதுரை பிரச்சாரத்தில் கலகல !

தெர்மாக்கோல் ராஜு என சமூகவலைதளங்களில் கேலி செய்யப்படும் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு வைகை ஆறு சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

மதுரையில் உள்ள வைகை ஆற்றை தெர்மாக்கோல் கொண்டு மூடி நீரை ஆவியாகாமல் தடுக்கும் திட்டம் ஒன்றை அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைத்தார். ஆனால் அமைச்சர் தெர்மாக்கோல்களை ஆற்றில் மிதக்கவிட்டு சென்ற சில நிமிடங்களில் அவைக் காற்றில் பறந்து சென்றன. அதனால் அந்த திட்டம் தோல்வி அடைந்ததுடன் மிகப்பெரிய கேலியும் செய்யப்பட்டது. அதன் பின்னர் செல்லூர் ராஜு சமூக வலைதளங்களில் தெர்மாக்கோல் ராஜு எனவும் விஞ்ஞானி ராஜு எனவும் கேலி செய்யப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய செல்லூர் ராஜு ‘பொறியாளர்கள் தெர்மகோல்களை ஒன்றுபடுத்தாமல் டேப்களை வெட்டி ஒட்டியதால் அனைத்தும் காற்றில் பறந்துவிட்டன. அவர்கள் செய்த தவறால் சமூக வலைதளங்களில் என் பெயர் தெர்மாக்கோல் ராஜு எனவும் விஞ்ஞானி ராஜு எனவும் மாறிவிட்டது. வெளிநாடுகளில் ரப்பர் பந்துகளைக் கொண்டு நீரை ஆவியாகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கிறார்கள். ஆனால் நம்மிடம் அந்த அளவுக்கு நிதி இல்லாததால் தெர்மாக்கோல் பயன்படுத்தினோம். ஆனால் அதன் பின் நான் விஞ்ஞானியாக மாறிவிட்டேன்’ என சிரித்துக்கொண்டெப் பேசினார்.

செல்லூர் ராஜுவின் இந்த பேச்சை கேட்ட மக்கள் சிரித்து ரசித்து ஆரவாரமாகக் கைதட்டினர்.