1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 18 மார்ச் 2019 (10:49 IST)

நாட்டை பாஜக விடமிருந்து காப்பாற்ற வேண்டும் – சவ்கிதார் குறித்து சீமான் கிண்டல் !

நாட்டின் காவலர்கள் என சொல்லிக்கொள்ளும் பாஜகவினரிடம் இருந்துதான் நாம் நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என சீமான் கூறியுள்ளார்.

கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய நரேந்திர மோடி, நாட்டில் யாரும் ஊழல் செய்ய விடமாட்டேன், நானும் ஊழல் செய்யமாட்டேன். தேசத்தின் காவலாளியாக இருப்பேன் என்று பேசியிருந்தார்.  ஆனால் இப்பொழுது ரஃபேல் ஊழலில் மத்திய அரசுக்கும் தொடர்பு இருக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர் குற்றம் சாட்டி வருகிறார். மேலும் தன்னைக் காவலாளி எனக் கூறிவரும் பிரதமர் ஒரு திருடன் எனக் கூறிவருகிறார்.

இதனால் பிரதமர் மோடி தனது பெயரை டிவிட்டடில் சவுகிதார் (காவலாளி) நரேந்தர மோடி என மாற்றியுள்ளார். மேலும் ‘உங்களுடைய காவலாளிக்கு ஆதரவாகவும், தேசத்துக்குச் சேவை செய்யும் துணையாகவும் இருங்கள். நான் தனியாக இல்லை. ஊழலுக்கும், தேசத்தில் சமூகக் கொடுமைக்கும் எதிராகப் போராடும் ஒவ்வொருவரும் காவலாளிதான். ஆதலால், காவலாளியாகிய நான் தனியாக இல்லை. தேசத்தின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைக்கும் ஒவ்வொருவரும் காவலாளிதான். இன்று ஒவ்வொரு இந்தியரும் நானும்கூட காவலாளிதான் என்று கூறுகிறார்கள்’ என மக்களையும் துணைக்கு சேர்த்துக்கொண்டுள்ளார்.

பிரதமர் மோடியைப் பின்பற்றி பல பாஜக தலைவர்களும் தங்கள் பெயருக்கு முன்னால் சவுகிதார் என சேர்த்துக்கொண்டுள்ளனர். இது கடுமையான விமர்சனங்களுக்கும் கேலிகளுக்கும் உள்ளாகியுள்ளது. இது தொடர்பாக இன்று சென்னை விமான நிலையத்தில் பேசியுள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ‘ நாட்டின் பாதுகாவலர் என சொல்லிக்கொள்ளும் அவர்களிடம் இருந்துதான் நாட்டைப் பாதுகாக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.