1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 27 ஏப்ரல் 2020 (09:22 IST)

பிரபாகரனை தெரியாதுன்னு புளுகாதீங்க துல்கர்! – சீமான் காட்டம்!

நடிகர் துல்கர் சல்மான் நடித்து வெளியாகவுள்ள மலையாள படத்தில் வளர்ப்பு நாய் ஒன்றிற்கு பிரபாகரன் என பெயரிட்டிருப்பது குறித்து சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

துல்கர் சல்மான் நடிப்பில் மலையாளத்தில் தயாராகியுள்ள படம் “வரனே அவசியமுண்ட”. இந்த படத்தில் ப்ரோமோஷன் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்த துல்கர் சல்மான் அதில் இடம்பெறும் வளர்ப்பு நாய்க்கு ”பிரபாகரன்” என பெயரிட்டிருப்பதாக வெளியான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியது. நாய்க்கு பிரபாகரன் என பெயரிட்டிருப்பது தமிழர்களையும், அவர்களது உரிமை போரையும் இழிவுபடுத்துவதாக பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதற்கு விளக்கம் அளித்துள்ள துல்கர் சல்மான் யாரையும் இழிவுபடுத்த அந்த பெயர் வைக்கப்படவில்லை என்றும், தவறுதலாக நடந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ”கடந்த சில வருடங்களுக்கு முன்பு இதே துல்கர் சல்மான் நடித்து “காம்ரேட் இன் அமெரிக்கா” என்ற படம் வெளியானது. அதில் பிரபாகரனின் புகைப்படத்தை ஒரு இடத்தில் காட்டியிருப்பார்கள். அதனால் பிரபாகரனை தெரியாது என துல்கர் சல்மான் கூறுவது ஏற்புடையதல்ல. தமிழன தலைவர் பிரபாகரனை இழிவுப்படுத்தும் வகையில் உள்ள அந்த காட்சியை படக்குழுவினர் நீக்க வேண்டும். இரு மாநிலங்கள் மக்கள் இடையே நட்புறவு நீடிக்க தொடர்ந்து இதுபோன்ற தமிழ் மற்றும் தமிழர் அவமதிப்பு காட்சிகளை மலையாள சினிமா எடுக்காமல் இருக்க வேண்டும்” என கூறியுள்ளார்.