வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 18 அக்டோபர் 2019 (19:26 IST)

இராமேஸ்வரம் கோவிலை கட்டியது இஸ்லாமியர்களா? வேல்முருகன் மீது போலீஸ் புகார்

இந்துக்கள் மீதும், இந்து மதம் மீதும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி விளம்பரம் தேடுவது என்பது ஒருசில அரசியல்வாதிகளின் வழக்கமான செயல் ஆகும். அந்த வகையில் இராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோவில் கட்டியது இஸ்லாமியர்கள் என்ற ஒரு கருத்தை சமீபத்தில் மேடை ஒன்றில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் பேசியுள்ளார். இதற்கு இந்து மக்கள் கட்சி கடும் கண்டனம் தெரிவித்ததோடு வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் புகார் அளித்துள்ளது
 
இந்து மக்கள் கட்சியின் சார்பில் அளிக்கப்பட்டுள்ள புகார் மனுவில், ‘இந்து மக்களின் புண்ணிய ஸ்தலமான அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோவிலை இஸ்லாமியர்கள் தான் கட்டினார்கள் என பொது மேடையில் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அவர்களின் பேச்சு சமூக வலைதளங்களில் பரவி இந்து மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும், இந்து மக்களின் மனம் புண்படும் வகையில் அவமதிக்கும் வகையிலும் பேசி மதக் கலவரத்தை தூண்ட முயற்சிக்கும் வகையிலும் பொது மேடையில் பேசிய வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது
 
இந்த புகார் மீது இராமேஸ்வரம் போலீசார் விரைவில் விசாரணை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து இந்து மக்கள் கட்சியின் டுவிட்டர் பக்கத்தில், ‘இராமநாதசுவாமி திருக்கோவில் கட்டியது இஸ்லாமியர்கள் என்ற தவறான கருத்தை பேசிய                  தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன்  மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்ககோரி  இந்து மக்கள் கட்சியின் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது