வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : புதன், 16 அக்டோபர் 2019 (14:23 IST)

இந்து அமைப்புகளின் புத்தகத்தை கிழித்த வழக்கறிஞர்: அயோத்தி வழக்கில் பரபரப்பு!

அயோத்தி வழக்கில் இந்து அமைப்புகள் சமர்பித்த புத்தகத்தை வழக்கறிஞர் ஒருவர் கிழித்து எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அயோத்தி பாபர் மசூதி வழக்கில் இன்றுடன் ஒட்டு மொத்த விசாரணையும் முடிக்கப்படுவதாக நீதிபதி சஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார். நீண்ட காலமாக நீடித்து வரும் இந்த வழக்கை முடிக்க மூன்று பேர் கொண்ட சமரச குழு அமைக்கப்பட்டும் தீர்வுகள் எட்டப்படவில்லை.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி சஞ்சன் கோகாய் நவம்பரில் ஓய்வு பெற இருப்பதால் அதற்குள் வழக்கை முடித்து தீர்ப்பை வழங்க அவர் முயற்சித்து வருவதாக தெரிகிறது. இன்று நடைபெற்று வரும் இறுதிக்கட்ட விசாரணையில் இந்து அமைப்பினருக்கு தங்கள் தரப்பு நியாயங்களை பேச 45 நிமிடங்களும், இஸ்லாமிய அமைப்புகளுக்கு 1 மணி நேரமும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தங்கள் தரப்புக்கு மேலும் அதிக நேரம் வழங்க வேண்டும் என இந்து அமைப்பு வழக்கறிஞர் கேட்க அதற்கு நீதிபதிகள் குழு 5 மணிக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்பதால் நேரத்தை அதிகப்படுத்த முடியாது என மறுத்துவிட்டனர்.

இந்நிலையில் தங்கள் தரப்பு நியாயங்களை பேசிய இந்து அமைப்பினர் ‘ராமஜென்ம பூமி என்பது ஒன்றுதான். முஸ்லிம்கள் எங்கு வேண்டுமானாலும் தொழுது கொள்ளலாம். ஆனால் இந்துக்கள் ராமஜென்ம பூமியில் மட்டுமே வழிபட முடியும். சர்ச்சைக்குரிய நிலத்தில் முஸ்லீம்களுக்கு உரிமையில்லை. 1935க்கு பிறகு முஸ்லீம்கள் அந்த பகுதியில் தொழுகை நடத்தவில்லை” என குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் மூன்று பேர் கொண்ட மத்தியஸ்த குழு சமர்பித்த அறிக்கையும் நீதிமன்ற ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் இந்து அமைப்புகள் தாக்கல் செய்த புத்தக பிரதியை கிழித்தெறிந்த ராஜிவ் தவான் என்னும் வழக்கறிஞர் இந்து அமைப்புகள் நீதிமன்ற மரியாதையை கேலிக்கூத்தாக்குவதாக குற்றம் சாட்டினார்.

இதனால் சற்று நேரம் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு நீதிபதிகள் அந்த வழக்கறிஞரை ‘இப்படி நடந்து கொள்வதால் நேர விரயம்தான் ஆகும். பிறகு நாங்கள் எழுந்து போய்விடுவோம்’ என கூறி கண்டித்துள்ளனர்.

மதியத்திற்குள் இஸ்லாமிய அமைப்புகளின் வாதம் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.