1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 23 மே 2021 (12:18 IST)

கொத்து கொத்தாய் கொரோனா பரவுறதுக்கான வேலை இது! – ராமதாஸ் கண்டனம்!

தமிழகத்தில் நாளை முதல் கடும் ஊரடங்கு அறிவிக்கப்பட உள்ள நிலையில் இன்று மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளதற்கு ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த இரண்டு வாரமாக தளர்வுகளுடன் பொதுமுடக்கம் அமலில் இருந்து வந்தது. எனினும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் நாளை முதல் தளர்வுகளற்ற கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நாளை முதல் முழு ஊரடங்கு என்பதால் இன்றும், நேற்றும் கடைகள் இரவு 9 வரை செயல்படவும், மக்கள் பொருட்கள் வாங்கி கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் பல இடங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் “நாளை முதல் தளர்வில்லா ஊரடங்கு என்பதால் நேற்றும், இன்றும் நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்கு தளர்வுகள் அபத்தமானவை. அனைத்து கடைகள், சந்தைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கொத்துக் கொத்தாக கொரோனா பரவுவதற்கே இது வழிவகுக்கும்!” என தெரிவித்துள்ளார்.

மேலும் தேவையின்றி சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் கொரோனா பரவல் ஊர் விட்டு ஊர் வேகமாக பரவ வழி ஏற்படுத்திவிட்டதாகவும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.