தமிழகத்தில் இன்றும் நாளையும் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!
தமிழகத்தில் இன்றும் நாளையும் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வருகிறது. பல மாவட்டங்களில் 100 டிகிரி வெப்பம் பதிவாகி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில், தமிழகத்தில் இன்றும் நாளையும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக, மார்ச் 25, 26 ஆகிய இரண்டு நாட்கள் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதர தமிழக மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதே நேரத்தில், தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இயல்பை விட வெப்பம் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகபட்சமாக 97 டிகிரி வரை வெப்பம் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Edited by Siva