1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 23 மே 2018 (15:00 IST)

தூத்துகுடியில் மீண்டும் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி

தூத்துகுடியில் நேற்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டு அதனால் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில் 11 பேர் பலியாகினர். இந்த அதிர்ச்சியில் இருந்தே இன்னும் தமிழக மக்கள் மீண்டு  வராத நிலையில் இன்று மீண்டும் அங்கு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் ஒருவர் பலியாகியுள்ளதாகவும் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
இன்று காலை முதல் மீண்டும் தூத்துகுடி பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் மக்கள் மீண்டும் ஸ்டெர்லைட்டுக்கு எதிராகவும், நேற்று பலியான 11 உயிர்களுக்கு நீதிகேட்டும் போராடினர். இந்த நிலையில் திடீரென காவல்துறை வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் அங்கு மீண்டும் பதட்டம் அதிகரித்தது. 
 
இந்த நிலையில் தூத்துக்குடி அண்ணாநகரில் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டதாகவும், பொதுமக்கள் கல்வீசி தாக்கியதை தொடர்ந்து காவல்துறையினர் ரப்பர் குண்டு மூலம் சுட்டதாகவும் தெரிகிறது. இந்த தாக்குதலில் இருவர் படுகாயம் அடைந்ததாகவும், அவர்களில் ஒருவர் கவலைக்கிடமாக இருந்த நிலையில் அவருடைய உயிர் சற்றுமுன் பிரிந்ததாகவும் அங்கிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.