ஞாயிறு, 15 பிப்ரவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 11 பிப்ரவரி 2026 (21:30 IST)

தவெகாவுக்கு ஆதரவு தந்தது மனிதாபிமானம் மட்டுமே!.. பழனிச்சாமி ஓப்பன்!...

eps vijay
தவெக தலைவர் விஜய் கரூருக்கு சென்றபோது அவரைக் காண பல ஆயிரம் பேர் கூடியதில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் வரை உயிரிழந்தனர். கூட்டத்தில் திடீரென ஆம்புலன்ஸ் நுழைந்துதான் இதற்கு காரணம்.. இதற்கு பின்னணியில் திமுகவின் சதி உள்ளது என தவெகவினர் புகார் சொன்னார்கள்.

ஆனால் திமுகவினரோ அந்த கூட்டத்திற்கு விஜய் மிகவும் தாமதமாக வந்தார்.. மதியம் முதலே அங்கு மக்கள் கூட துவங்கினர், அவர்களுக்கு தண்ணீர், உணவு போன்ற அத்தியாவசிய தேவைகளை தவெக நிர்வாகிகள் செய்து கொடுக்கவில்லை. அதனால்தான் இந்த சம்பவம் ஏற்பட்டது என்று சொன்னார்கள்..

இந்த சம்பவம் நடந்து கொண்டிருந்த போதே விஜய் அங்கிருந்து கிளம்பி சென்னை வந்து விட்டார். அதுவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அப்போது விஜய் எப்படியும் தங்களுடன் கூட்டணிக்கு வருவார் என்கிற நம்பிக்கையில் எடப்பாடி பழனிச்சாமியும் பாஜகவும் கரூர் விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாகவும் திமுகவுக்கு எதிராகவும் கருத்துக்களை தெரிவித்தனர்
. மக்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது போலீஸாரின் கடமை.. வேண்டுமென்றே கூட்ட நெரிசலை ஏற்படுத்தினார்கள்’ என்றெல்லாம் விஜய்க்கு ஆதரவாக பேசினார்கள்.

ஆனால் அவர்கள் எதிர்பார்த்தது போல் அவர்களின் கூட்டணியில் விஜய் இணையவில்லை.. அதோடு அதிமுகவும் விமர்சிக்க துவங்கியிருக்கிறார் விஜய். இதில் கோபமடைந்த அதிமுக தற்போது விஜயை கடுமையாக விமர்சிக்க துவங்கவிட்டது.

இந்நிலையில் இன்று நடந்த இந்தியா டுடே கருத்தரங்கில் கலந்து கொண்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ‘திமுகவுக்கும், தவெகவுக்கும் இடையேதான் போட்டி என விஜய் சொல்வதை நாங்கள் ஒரு பொருட்டாகவே பார்க்கவில்லை.. தவெகவுடன் எங்களுக்கு எந்த சாப்ட் கார்னரும் இல்லை.. அவர்களுக்கு ஒரு பிரச்சனை வந்தபோது மனிதாபிமான அடிப்படையில் நடந்து கொண்டோம்.. அவ்வளவுதான்’ எனக் கூறியிருக்கிறார்..