புதன், 11 பிப்ரவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 11 பிப்ரவரி 2026 (08:15 IST)

ரவுடிகளை அனுப்பி தவெகவினரை தாக்குகிறார் சேகர் பாபு!.. நிர்மல்குமார் பேட்டி!...

sekar babu
தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் அனைத்து கட்சிகளுமே தேர்தல் பணிகளில் வேகம் காட்ட துவங்கியிருக்கிறது. குறிப்பாக தொகுதி பங்கீடு பேசுவது, கூட்டணி அமைப்பது, மக்களிடம் பிரச்சாரம் செய்வது என வேலைகள் சூடு பிடித்திருக்கிறது. அந்த வகையில் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த நிர்வாகிகளும் தமிழகத்தில் உள்ள எல்லா தொகுதிகளிலும் மக்களிடம் பிரச்சாரம் செய்ய துவங்கியிருக்கிறார்கள்..

இந்நிலையில் திமுக அமைச்சர் சேகர்பாபு எம்எல்ஏவாக இருக்கும் துறைமுகம் தொகுதியில் நேற்று தவெகவினர் 5 பேர் மக்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது நூற்றுக்கு மேற்பட்ட ரவுடிகள் அவர்களை சுற்றிவளைத்து தாக்கியிருக்கிறார்கள். அதில் ஒரு பெண் கர்ப்பிணி. அவர் கர்ப்பிணி என்றும் பாராமல் அவரையும் தாக்கியிருக்கிறார்கள். அதில் இரண்டு பேர் தற்போது அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 5 நிர்வாகிகளையும் ஆதவ் அர்ஜுனா மற்றும் நிர்மல்குமார் நேரில் சென்று பார்த்தார்கள். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய பிடி செல்வகுமார் ‘சேகர் பாபு அடிப்படையில் ஒரு ரவுடி. துறைமுகம் தொகுதியில் கடந்த சில நாட்களாக தவெகவை சேர்ந்த நிர்வாகிகள் மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.. இன்று 5 பேர் அங்கு சென்றபோது நூற்றுக்கு மேற்பட்ட ரவுடிகளை அனுப்பி எங்கள் நிர்வாகிகளை தாக்க சொல்லியிருக்கிறார் சேகர் பாபு.

sekar babu
அதில் 2 பேர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுதான் திமுக ரவுடிசம். இதுதான் அவர்களின் மாடல். இதைத்தான் அவர்கள் எப்போதும் செய்து வருகிறார்கள்.. ஒருபக்கம் யாரெல்லாம் பிரச்சாரம் செய்தார்களோ அவர்களை தனிப்பட்ட முறையில் அவர்கள் செல்போன் எண்ணுக்கு அழைத்து சேகர் பாபு மிரட்டுகிறார்..

ஐந்து நாட்களுக்கு முன்பு துறைமுகம் தொகுதியில் மக்களிடம் பிரச்சாரம் செய்து வந்த ஒரு தவெக நிர்வாகியை மூன்று நாட்களாக காணவில்லை. இங்கு மட்டுமல்ல.. இது ஒரு முன்னோட்டம்தான். தமிழகத்தில் உள்ள எல்லா தொகுதிகளிலும் இதை செய்ய திமுக திட்டமிட்டிருக்கிறது. இதைக்கண்டு நாங்கள் பயப்படமாட்டோம். கண்டிப்பாக இந்த முறை துறைமுகம் தொகுதியில் சேகர்பாபு தோற்பார்.

சேகர்பாபு என்ன ரவுடித்தனம் செய்தாலும் துறைமுகம் தொகுதியில் தொடர்ந்து பிரச்சாரம் செய்வோம். இன்று 5 பேர் வந்தால் நாளை 100 பேர் வருவார்கள். சேகர்பாபுவை தோற்கடிக்கும் வரை நாங்கள் ஓய மாட்டோம்.  இவ்வளவு கடுமையாக தாக்கி இரண்டு பேர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தும் புகார் கொடுத்தால் போலீசார் அதை ஏற்க மறுக்கிறார்கள். ஒரு சி.எஸ்.ஆர் காபியை கூட போட மறுக்கிறார்கள்.. இதுதான் திமுகவின் உண்மையான ஆட்சி’ என அவர் பொங்கியிருக்கிறார்.