1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 28 மார்ச் 2023 (11:27 IST)

தீர்ப்பு வந்த உடனே மேல்முறையீடு செய்த ஓபிஎஸ்: நாளை விசாரணை

admk
அதிமுக பொதுச்செயலாளர் குறித்த வழக்கின் தீர்ப்பு வெளியான ஒரு சில நிமிடங்களில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச் செயலாளர் என்ற பதவியை ஏற்றுக்கொண்டார். இந்த நிலையில் தீர்ப்பு வந்த சில நிமிடங்களில் வழக்கின் தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் மற்றும் அதிமுக பொது குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்த வழக்கு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகிய இருவரின் சார்பில் வாதங்கள் செய்யப்பட்ட நிலையில் இன்று தீர்ப்பு வெளியானது. 
 
இந்த தீர்ப்பில் தனி நீதிபதி அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் மற்றும் அதிமுக பொது குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று தீர்ப்பளித்தார். இதனை அடுத்து உடனடியாக அதிமுக அலுவலகம் சென்ற எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக பதவி ஏற்றுக்கொண்டார். 
 
இந்த நிலையில் தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபிக் அமர்வு நாளை விசாரணை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
Edited by Mahendran