வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 25 ஆகஸ்ட் 2020 (12:42 IST)

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு மவுனம் காப்பது ஏன்? ஸ்டாலின் கேள்வி!

சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி நீட் தேர்வை நடத்த முடியாது என அறிவிக்க வேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை. 
 
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் மத்திய அரசு சமீபத்தில் நீட் தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதியும், ஜே.இ.இ தேர்வுகள் செப்டம்பர் 1-6 ஆம் தேதி வரையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.   
 
இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, இந்தியாவின் எல்லா பகுதியிலிருந்தும் எனக்கு கிடைத்த உறுதியான தகவலின்படி, நீட், ஜே.இ.இ உள்ளிட்ட தேர்வுகளை எழுதுவதற்கு தேவையான வசதிகள் தற்போது மாணவர்களுக்கு இல்லை.  
 
எனவே, இந்த தேர்வுகளை தீபாவளிக்குப் பிறகு நடத்தவேண்டுமென்று மத்திய கல்வித்துறைக்கு நீங்கள் வலியுறுத்தவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 
 
இவரைத்தொடர்ந்து தற்போது திமுக தலைவர் ஸ்டாலின், மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், 2020-ம் ஆண்டுக்கான நீட் மற்றும் ஜெ.இ.இ தேர்வுகளை எழுதும் மாணவர்கள் சந்திக்கும் இடர்களை, உடனடியாக தங்களது கவனத்திற்குக் கொண்டுவர இக்கடிதத்தை எழுதுகிறேன் என குறிப்பிட்டு மாணவர்களின் உயிரைப் பணயம் வைத்து எந்தவொரு முடிவும் அவசரகதியில் எடுக்கப்படக் கூடாது.  
 
மாணவர்களின் உடல்நலனையும், எதிர்காலத்தையும் அரசு கவனத்தில் கொண்டு செயலாற்ற வேண்டும். எனவே, கொரோனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வரும்வரை ஜெ.இ.இ. மற்றும் நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
 
இதனைத்தொடர்ந்து தற்போது சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி நீட் தேர்வை நடத்த முடியாது என அறிவிக்க வேண்டும் எனவும் நீட் மருத்துவ நுழைவுத்தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு மவுனம் காப்பது ஏன்? எனவும் மருத்துவ சேர்க்கை தொடர்பாக அரசு கையறு நிலையில் இருப்பதால் பெற்றோர்கள், மாணவர்கள் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர் எனவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.