1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 26 டிசம்பர் 2022 (12:55 IST)

எத்தனை பெட், ஆக்ஸிஜன் ஸ்டாக் இருக்கு? உடனே ரிப்போர்ட் பண்ணுங்க! – அமைச்சர் அதிரடி உத்தரவு!

தமிழ்நாட்டில் கொரோனா பரவலுக்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் நிலையில் அனைத்து மருத்துவமனைகளுக்கும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் புதிய உத்தரவை வெளியிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இந்தியாவிலும் கொரோனா பரவலுக்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் மத்திய அரசு மாநில அரசுகளுக்கு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்து அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. நாளை கொரோனா கால அவசரகால ஒத்திகைகளை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் “தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் மட்டும் 1.25 லட்சம் படுக்கைகள் உள்ளன. இதில் 72 ஆயிரம் படுக்கைகள் கொரோனா சிகிச்சைக்காக தயார் செய்யப்பட்டது.


இப்போது 2 ஆயிரம் டன் ஆக்ஸிஜன் தயாரிக்கும் வகையில் வசதி உள்ளது. 3 மாதங்களுக்கு தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளன” என தெரிவித்துள்ளார்.

மேலும் “மத்திய அரசின் உத்தரவுப்படி நாளை காலை 10 மணி முதல் 12 மணி வரை அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் படுக்கை வசதி, ஆக்ஸிஜன், மருந்துகள் இருப்பு உள்ளிட்ட அனைத்தையும் ஆய்வு செய்து அதுபற்றிய அறிக்கையை 12 மணி நேரத்திற்குள் அரசுக்கு அனுப்ப வேண்டும்” என தெரிவித்துள்ளார். நாளை சில மருத்துவமனைகளில் அவரே நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K