1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 26 டிசம்பர் 2022 (12:18 IST)

ராகுல் காந்தி யாத்திரை மூலம் பூகம்பத்தை உண்டாக்கிவிட்டார்! – முதல்வர் மு.க.ஸ்டாலின்!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை மூலம் பூகம்பத்தை உண்டாக்கி விட்டதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி, இந்தியா முழுவதும் நடைபயணமாக செல்லும் பாரத் ஜோடோ யாத்திரை என்னும் இந்திய ஒற்றுமை யாத்திரையை சில மாதங்கள் முன்னதாக தமிழ்நாட்டின் கன்னியாக்குமரி மாவட்டத்திலிருந்து தொடங்கி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், டெல்லி என பல மாநிலங்களையும் கால்நடையாகவே கடந்து வருகிறார்.

இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் கோபண்ணா எழுதிய ’மாமனிதர் நேரு’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் “மாமனிதர் நேரு புத்தகத்தை வெளியிடுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். 2015ல் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை இன்னும் வரவில்லை. இதை பார்க்கும்போது நேருவின் அருமை புரிகிறது” என கூறியுள்ளார்.

மேலும் ராகுல் காந்தியின் யாத்திரை குறித்து பேசிய அவர் “ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரை மூலமாக பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தி வருகிறார். ராகுல்காந்தியின் பேச்சும், செயல்பாடும் நேருவை போல உள்ளது. கோட்சேவின் வாரிசுகளுக்கு, நேருவின் வாரிசுகளின் பேச்சு எரிச்சலை ஏற்படுத்ததான் செய்யும்” என கூறியுள்ளார்.

Edit By Prasanth.K