1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 28 ஆகஸ்ட் 2018 (16:09 IST)

ஜெயக்குமாரை அதிமுகவிலிருந்து நீக்காவிட்டால்? - எச்சரிக்கும் மதுசூதனன்

அதிமுக அமைச்சர் ஜெயக்குமாரை அதிமுகவிலிருந்து நீக்க வேண்டும் என மதுசூதனன் போர்க்கொடி தூக்கியிருப்பதாக கூறப்படுகிறது.

 
அதிமுகவின் தொடக்க காலத்திலிருந்தே மதுசூதனனுக்கும், ஜெயக்குமாருக்கும் ஆகாது. இருவரின் ஒரே பகுதியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் இருவரும் தனித்தனி ஆதரவாளர்களுடன் அரசியல் செய்து வருபவர்கள். ஆனால், ஜெயலலிதா இருந்த வரை ஒரு தலைமைக்கு கட்டுப்பட்டு செயல்பட்டனர்.
 
ஜெ.வின் மறைவிற்கு பின் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மதுசூதனனுக்கு சீட் கொடுக்கக் கூடாது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கூறியவர் ஜெயக்குமார். அதோடு, தனது ஆதரவாளரான பாலகங்காவை நிற்க வைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார். ஆனால், மதுசூதனனே வேட்பாளர் என ஓ.பி.எஸ் தீவிரமாக இருந்ததால் அது முடியாமல் போயிற்று. 
ஆர்.கே.நகரில் மதுசூதனன் தோல்வி அடைந்த போது, தன்னுடைய தோல்விக்கு ஜெயக்குமாரே காரணம், எனக்காக கட்சி நிர்வாகிகள் தேர்தல் பணி செய்வதை அவர் தடுத்து விட்டார், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக தலைமையிடம் மதுசூதனன் மனு கொடுத்தார். ஆனால், பழனிச்சாமியின் வலதுகரமாக செயல்படும் ஜெயக்குமார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 
 
இந்நிலையில்தான், கூட்டுறவு சங்கத்திற்கான தேர்தலில் தனது ஆதரவாளர்களை மதுசூதனன் மற்றும் ஜெயக்குமார் களமிறக்க, வட சென்னையில் மீண்டும் மோதல் ஏற்பட்டது. இருவரின் ஆதரவாளர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். எனவே, தற்போது மீண்டும் மதுசூதனன் போர்க்கொடி தூக்கியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களையும் அவர் சந்திக்க திட்டமிட்டிருந்தார். ஆனால், ஓ.பி.எஸ் தலையிட்டு அதை நடக்கவிடாமல் தடுத்துள்ளதாக தெரிகிறது.
 
ஆர்.கே.நகர் தொகுதியில் தான் தோல்வி அடைய காரணமான ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையேல் செய்தியாளர்களை சந்தித்து அதிமுகவிலிருந்து விலகுவதாக அறிவிப்பேன் என மதுசூதனன் கூறியுள்ளதாக தெரிகிறது. அதிமுகவின் மூத்த நிர்வாகிகளிடையே மோதல் ஏற்பட்டுள்ளது அக்கட்சி தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.