வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 7 ஏப்ரல் 2020 (09:45 IST)

சாலையோர மரத்தில் தூக்கில் தொங்கிய ஓட்டுனர் ! –மது கிடைக்காததால் நடந்த அவலம்!

புதுக்கோட்டை அருகே மது குடிக்க முடியாததால் ஏற்பட்ட மன உளைச்சலில் ஓட்டுனர் ஒருவர் மரத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்தியா முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளைத் தவிர மற்ற அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதன் ஒரு பக்கமாக தமிழகத்தில் செயல்பட்டு வந்த சாராயக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 13 நாட்கள் முடிந்துள்ள நிலையில் குடிமகன்கள் குடிக்காமல் இருக்க முடியாமல் கடைகளுக்குள் புகுந்து திருடும் சம்பவங்களும் நடந்துள்ளன.

அதுமட்டுமில்லாமல் தமிழகம் மற்றும் கேரளாவில் இதுவரை மது கிடைக்காத மன உளைச்சலில் 10 க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் செங்கல்பட்டைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் மது குடிக்க முடியாத விரக்தியில் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் வசித்து வந்த லாரி ஓட்டுநர் கருப்பையா தினமும் குடிக்கும் பழக்கம் உள்ளவர் என சொல்லப்படுகிறது. ஆனால் ஊரடங்கு காரணமாக கடந்த 13 நாட்களாக மது கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் சாலையோர மரத்தில் தூக்கு மாட்டித் தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஏற்கனவே மது கிடைக்காததால் வார்னிஷைக் கலந்து குடித்து மூன்று பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.