1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 10 டிசம்பர் 2018 (12:41 IST)

கௌசல்யா மறுமணம் செய்த சக்தி ஒரு மோசடி பேர்வழி? குங்குமம் ஆசிரியர் பரபரப்பு தகவல்!

ஆணவக்கொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி மறுமணம் செய்திருக்கும் சக்தி ஒரு மோசடி பேர்வழி என குங்குமம் ஆசிரியர் கே.என்.சிவராமன் குற்றச்சாட்டு எழுப்பியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உடுமலை ஆணவக்கொலை சம்பவத்தில் இளம் வயதிலேயே தனது கணவர் சங்கரை இழந்த கௌவுசல்யா, ஆணவக்கொலைக்கு காரணமானவர்கள் தனது பெற்றோர்களாக இருந்தும் அவர்களுக்கு நீதிமன்றத்தில் தண்டனை பெற்று கொடுத்தார்
நேற்று கோவையில் கௌசல்யா பறை இசைக்கலைஞர் சக்தியை மறுமணம் செய்து கொண்டார். கவுசல்யாவின் மறுமணத்திற்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் குங்குமம் ஆசிரியர் கே.என். சிவராமன் என்ற பெயரில் உள்ள பேஸ்புக் பக்கத்தில் இதுவா மறுமணம்? இதையா தமிழக முற்போக்கு சக்திகள் என தங்களை அறிவித்துக் கொண்டவர்கள் நடத்தி வைத்திருக்கிறார்கள்?
 
ஒரு திருநங்கை உட்பட சுயசாதி விமர்சனத்துடன் சமூக மாற்றத்துக்காக பொது வாழ்க்கைக்கு வந்த நான்கைந்து இளம் பெண்களின் வாழ்க்கையை காதல் என்னும் பெயரில் சீரழித்தது வரை மணமகன் மீதான குற்றப்பத்திரிகை அதிகம்.
 
அதிலும் ஒரு பெண்ணுடன் மாதக்கணக்கில் வாழ்ந்து அவளது ஆறு மாத கருவை வலுக்கட்டாயமாகக் கலைத்து நடுத்தெருவில் நிறுத்தியவன்.
இவையெல்லாம் அவதூறுகள் அல்ல. தகுந்த ஆதாரங்கள் இருந்தும் நீதி கிடைக்காமல் கதறிக் கொண்டிருக்கும் நியாயங்கள். இதே முகநூலில் பலருக்கும் தெரியும். பத்திரிகையாளர்கள் உட்பட.
 
அவ்வளவு ஏன் அந்த மணமகனை இப்போது சீர்திருத்த மணம் புரிந்திருக்கும் மணமகள் முதல் புரட்சிகரமாக இத்திருமணத்தை நடத்தி வைத்திருக்கும் இயக்கங்களின் தலைவர்கள் வரை அனைவருக்குமே எல்லாமே தெரியும் என்பதுதான் கொடுமை. பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் இவர்களிடமும் நியாயம் கேட்டிருக்கிறார்கள் என்பதுதான் வேதனை.
 
சாதி ஆணவ படுகொலை, நாடகக் காதல் என்பதற்கெல்லாம் விளக்கம் தெரியும். நடந்து முடிந்திருக்கும் இத்திருமணத்தையும் எப்படி அழைக்க வேண்டும் என்று சொன்னால் நன்றாக இருக்கும்.
 
திருமண செய்தி அறிந்து மகிழ்ச்சியும் மனநிறைவுமாக தொடங்கிய இந்நாள் இப்படி மனக் கொந்தளிப்புடன் முடிந்திருக்க வேண்டியதில்லை...எழுதியது அவதூறு தவறான தகவல் என நிரூபித்தால் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன் என அவர் குறிப்பிட்டிருக்கிறார்.